கடந்த 2 ஆண்டுகளில் இந்தியர்களின் முதலீடு வெகுவாக குறைந்துவிட்டது: சுவிஸ் வங்கிகள் அறிவிப்பு
Views - 41 Likes - 0 Liked
-
கடந்த 2 ஆண்டுகளில் இந்தியர்கள் பணம் முதலீடு செய்வது இதற்கு முன்னர் இல்லாத அளவுக்கு குறைந்து விட்டதாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தனியார் வங்கிகள் தெரிவித்துள்ளன. கருப்பு பணம் வைத்திருக்கும் இந்தியர்கள், அதனை சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாடு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்குவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசு சமீபகாலமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பல்வேறு கட்ட வலியுறுத்தல்களுக்குப் பிறகு, வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களை இந்தியாவுக்கு அளிக்க, சுவிட்சர்லாந்து அரசு அண்மையில் ஒப்புக் கொண்டது. எனினும் இத்தகவல்களை இந்திய அரசு ரகசியமாக பாதுகாக்க வேண்டுமென சுவிஸ் வங்கிகள் வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியர்கள் பணம் முதலீடு செய்வது குறைந்து விட்டதாக தனியார் வங்கிகளின் சங்க மேலாளர் ஜன் லான்லோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, கடந்த 2015-ம் ஆண்டு இறுதியில் சுவிஸ் தனியார் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு, ரூ.8,392 கோடியாக குறைந்துவிட்டது. 1997-ம் ஆண்டுக்குப் பிறகு எங்கள் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு இந்த அளவுக்குக் குறைந்தது இதுவே முதல்முறையாகும்.
2006-ம் ஆண்டு இறுதியில் இந்தியாவைச் சேர்ந்தவர்களின் முதலீடு எங்கள் வங்கிகளில் ரூ.23,000 கோடியாக இருந்தது. இதுவே இந்தியர்கள் செய்த அதிகபட்ச முதலீடாகும். அதன்பிறகு முதலீடு செய்யப்படுவது குறையத் தொடங்கிவிட்டது. ஆசிய பிராந்தியத்தைப் பொறுத்தளவில் ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான் இப்போது எங்கள் வங்கிகளில் அதிகளவில் பணத்தை முதலீடு செய்துள்ளனர் என்று லான்லோ கூறியுள்ளார். சுவிட்சர்லாந்து அரசுடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதால், பெரு முதலாளிகள் தங்கள் பணத்தை வேறு இடங்களில் பதுக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.News