குமரி மாவட்டத்தில் தொடர் மழை: பாலமோர் பகுதியில் 6½ செ.மீ. பதிவானது
Views - 259 Likes - 0 Liked
-
குமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நாகர்கோவிலில் நேற்று முன்தினம் இரவில் இருந்து விடிய, விடிய மழை விட்டு, விட்டு பெய்தது.
நேற்று காலையிலும் மழை தொடர்ந்தது. காலை 10 மணிக்குப்பிறகு வானம் மேகக்கூட்டங்களால் இருண்டு காட்சி அளித்தது. எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்ற நிலையில் அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் பிற்பகல் வரை மழை ஓய்ந்திருந்தது.
மார்த்தாண்டம்
மார்த்தாண்டம், குழித்துறை, குலசேகரம், களியக்காவிளை, ஆற்றூர் போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய மழை பெய்தது. நேற்று காலையில் விடிந்த பின்பும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. கொல்லங்கோடு, குளச்சல் போன்ற கடலோர பகுதிகளில் மழையுடன் பலத்த காற்று வீசியது. இதனால், கடலில் அலைகளின் வேகம் அதிகமாக இருந்தது.
தற்போது மேற்கு கடற்கரையில் மீன்பிடி தடைகாலம் நிலவி வருவதால் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இந்தநிலையில், நேற்று அலையின் வேகம் அதிகமாக இருந்ததால் கொல்லங்கோடு, குளச்சல் போன்ற பகுதிகளில் கட்டுமர மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
படகு போக்குவரத்து நிறுத்தம்
சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. நேற்று அதிகாலை மேகமூட்டத்துடன் மிதமான மழை பெய்தது. இதனால் சூரிய உதயத்தை காண வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். பின்னர் நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது.
விவேகானந்தர் மண்டபத்துக்கு காலை 8 மணிக்கு வழக்கம் போல் படகு போக்குவரத்து தொடங்கியது. அப்போது, கடலில் காற்றின் வேகம் சற்று அதிகமாக இருந்தால் படகு போக்குவரத்து 8.30 மணிக்கு நிறுத்தப்பட்டது. பின்னர், 10 மணிக்கு அலையின் வேகம் குறைந்தது. அதன்பின்பு படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
சீதோஷ்ண நிலை மாற்றம்
குமரி மாவட்டத்தில் கடுமையான வெயிலால் அனலாக தகித்து வந்த சீதோஷ்ண நிலை, தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஜில்லென்ற சீதோஷ்ண நிலையாக மாறியுள்ளது. நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டப் பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:–
பேச்சிப்பாறை– 19, பெருஞ்சாணி– 19.2, சிற்றார் 1– 17.2, சிற்றார் 2– 16.4, பொய்கை– 14.2, மாம்பழத்துறையாறு– 27, முக்கடல்– 20, நிலப்பாறை– 29.2, இரணியல்– 43.2, ஆணைக்கிடங்கு– 27, குளச்சல்– 38.4, அடையாமடை– 32, கோழிப்போர்விளை– 40, முள்ளங்கினாவிளை– 42, திற்பரப்பு– 38.6, நாகர்கோவில்– 32.2, பூதப்பாண்டி– 18.1, சுருளோடு– 41.6, பாலமோர்– 64.8 (6½ செ.மீ.), மயிலாடி– 33.2, கொட்டாரம்– 31.4 என்ற அளவில் மழை பதிவாகியிருந்தது.
முக்கடல் அணை
மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 94 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 42 கன அடி தண்ணீரும், சிற்றார்–1 அணைக்கு 6 கன அடி தண்ணீரும், சிற்றார்–2 அணைக்கு 23 கன அடி தண்ணீரும் வருகிறது. இதில் பெருஞ்சாணி அணையில் இருந்து 30 கன அடி தண்ணீரும், சிற்றார்–2 அணையில் இருந்து 10 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.
இவ்வளவு மழை பெய்தபோதிலும் நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள முக்கடல் அணையின் நீர் மட்டம் ஒரு அடியைக்கூட எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முக்கடல் அணைப்பகுதியில் 20 மி.மீ. மழை பெய்தபோதிலும் அணையின்நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததுதான் அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாததற்கு காரணம் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
அணைகளின் நீர்மட்டம்
அதேபோல கடந்த சில தினங்களாக குமரி மாவட்டத்தில் மழை பெய்து வந்தாலும் மாவட்ட அணைப்பகுதிகளில் நீர்மட்டம் பெருமளவில் உயரவில்லை.
நேற்றைய நிலவரப்படி 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 14.15 அடியாகவும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாகவும், தலா 18 அடி கொள்ளளவுகளைக் கொண்ட சிற்றார்–1 அணை நீர்மட்டம் 1.87 அடியாகவும், சிற்றார்–2 அணையின் நீர்மட்டம் 1.97 அடியாகவும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கை அணை நீர்மட்டம் 0.70 அடியாகவும், 54 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 23.05 அடியாகவும் உள்ளன.News