ஆதார் அட்டை தொடர்பான வழக்குகள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்
Views - 187 Likes - 0 Liked
-
அரசாங்கத்தின் பல்வேறு சலுகைகளை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று அறிவித்த மத்திய அரசு, இது தொடர்பான அறிவிக்கைகளையும் அவ்வப்போது வெளியிட்டது.
கடந்த 1–ந் தேதி முதல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டு இருக்கிறது. மேலும் வருமான வரி நிரந்த கணக்கு எண்ணுடன் (‘பான்’) ஆதார் எண்ணை இணைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
அரசு திட்டங்களின் சலுகைகளை பெற ஆதார் அட்டை கட்டாயம் என்பது தனி நபர்களை பற்றி தகவல்களை அம்பலப்படுத்துவதாக உள்ளது என்றும், இது தனிமனித உரிமையை மீறி செயல் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த நிலையில், மதிய உணவு திட்டம், அரசின் உதவித்தொகைகள் பெறும் திட்டம், உள்நாட்டு விமான பயணம், செல்போன் இணைப்பு பெறுவது ஆகியவற்றுக்கு கடந்த ஜூன் 30–ந் தேதிக்குள் ஆதார் எண்களை பெறவேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையை எதிர்த்து குழந்தைகள் உரிமைகளுக்கான தேசிய ஆணையத்தின் முன்னாள் தலைவர் சாந்தா சின்கா உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஆதார் அட்டை இல்லை என்பதற்காக யாருக்கும் அரசின் சலுகைகள் மறுக்கப்படமாட்டாது என்று உறுதி அளிக்கப்பட்டு இருப்பதால், அரசு திட்டங்களின் சலுகைகளை பெற ஆதார் எண் கட்டாயம் என்ற அறிவிக்கைக்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கடந்த ஜூன் மாதம் 27–ந் தேதி கூறியது.
கடந்த 7–ந் தேதி நீதிபதி ஜே.செல்லமேஸ்வர் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு ஆதார் அட்டை தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வந்த போது, ஆதார் எண் தொடர்பான அனைத்து மனுக்களையும் அரசியல் சாசன அமர்வு விசாரிப்பதுதான் சரியாக இருக்கும் என்று கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக தலைமை நீதிபதியை அணுகுமாறு மத்திய அரசுக்கும், மனுதாரர்களுக்கும் யோசனை கூறினார்கள்.
அதன்படி, மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், மனுதாரர்களின் சார்பில் ஷியாம் திவான் ஆகியோர் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஆஜராகி, ஆதார் அட்டை தொடர்பான வழக்குகளை விசாரிக்க அரசியல் சாசன அமர்வை விரைவில் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
உடனே தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் அவர்களிடம், இந்த வழக்குகளை 7 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு அவர்கள் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கலாம் என்று கூறினார்கள்.
இதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆதார் அட்டை தொடர்பான வழக்குகளை 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த அரசியல் சாசன அமர்வு வருகிற 18 மற்றும் 19–ந் தேதிகளில் விசாரணை நடத்தும் என்றும் அப்போது அவர்கள் கூறினார்கள்.
News