வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலைகள் தேக்கம்
Views - 223 Likes - 0 Liked
-
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலைகள் தேக்கம் அடைந்துள்ளன. வங்கிகள் மூடப்பட்டு பண பரிவர்த்தனை முடங்கியதால் பொதுமக்கள், வியாபாரிகள் தவித்தனர்.
வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது, காலி பணியிடங்களை நிரப்பவேண்டும், தேவையற்ற வங்கி சீர்திருத்த கொள்கைகளை கைவிடவேண்டும், வாராக்கடனை உடனடியாக வசூலிக்கவேண்டும், வாராக்கடன் பளுவை வாடிக்கையாளர்கள் மீது வங்கிகள் திணிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நேற்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சி.எச்.வெங்கடாச்சலம் தலைமை தாங்கினார். வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தாமஸ் பிரான்கோ, வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் உள்பட வங்கி ஊழியர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
வங்கி ஊழியர்கள் தொடர்புடைய 9 சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டன. அரசு வங்கிகள், சில தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கிராமிய வங்கிகள் என அனைத்து தரப்பு வங்கிகளை சேர்ந்த ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் வங்கிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.
சில வங்கிகளின் முன்பு, ‘வேலை நிறுத்தம் காரணமாக வங்கிகள் மூடப்படுகிறது’ என்ற அறிவிப்பு போர்டு தொங்கவிடப்பட்டிருந்தது.
பணம் செலுத்துவதற்கு மற்றும் எடுப்பதற்காக சென்ற பொதுமக்கள், வியாபாரிகள் வங்கிகள் மூடப்பட்டிருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சிலர் மூடப்பட்டிருந்த வங்கிகளின் முன்பு பாதுகாப்புக்காக நின்றிருந்த, பாதுகாவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வங்கிகள் மூடப்பட்டதால் பண பரிவர்த்தனைகளும், இதர வங்கி பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
அதேசமயத்தில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடைபெற்றன. காசோலை பண பரிமாற்றம் உள்பட வங்கிகளில் நடைபெறும் நேரடி பண பரிமாற்றங்கள் முடங்கியது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் என வங்கி சேவைகளை நம்பி இருக்கும் பல்வேறு தரப்பினரும் அவதிக்குள்ளாகினர். வங்கிகளுக்கு நேரடியாக சென்று பணம் எடுக்க முடியாமல், வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். மையங்களை நோக்கி படையெடுத்தனர்.
ஆனாலும், சில ஏ.டி.எம். மையங்களில் பணம் தீர்ந்துபோனது. வேலை நிறுத்தம் காரணமாக ஏ.டி.எம். மையங்களில் நேற்று பணம் நிரப்பும் பணியும் நிறுத்தப்பட்டது. இதனால் பணத்துக்காக பொதுமக்கள், வியாபாரிகள் திண்டாடவேண்டிய நிலை ஏற்பட்டது. அதேசமயத்தில் ஒரு சில தனியார் வங்கிகள் வழக்கம்போல் திறந்திருந்தன.
இன்று (புதன்கிழமை) அனைத்து வங்கிகளும் திறக்கப்படும் என்பதால் வங்கிகளில் கூட்ட நெரிசல் நிலவ வாய்ப்பு உள்ளது.
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நடந்த வங்கி ஊழியர்களின் போராட்டத்தில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 60 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். சென்னையில் மட்டும் 4,500 வங்கி கிளைகள் என தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்து 300 வங்கிகள் நேற்று மூடப்பட்டன.
திட்டமிட்டப்படி நடத்தப்பட்ட வங்கி ஊழியர்களின் போராட்டம் முழு வெற்றியை பெற்றுள்ளது. வங்கிகள் மூடப்பட்டதால் பண பரிவர்த்தனைகள் உள்பட எந்தவித வங்கி பணிகளும் நடைபெறவில்லை. இதனால் நாடு முழுவதும் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான சுமார் 40 லட்சம் காசோலைகள் தேக்கம் அடைந்துள்ளன.
தமிழகத்தை பொறுத்தமட்டில் ரூ.7 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான சுமார் 12 லட்சம் காசோலைகள் தேக்கம் அடைந்துள்ளன. எங்களுடைய கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்றால் செப்டம்பர் 15-ந்தேதி பேரணியாக சென்று பாராளுமன்றத்தை முற்றுகையிட உள்ளோம். இதனைதொடர்ந்து அக்டோபர் மாதம் 2 நாட்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கும் திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.News