காரில் கடத்திய 72 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது
Views - 218 Likes - 0 Liked
-
கன்னியாகுமரி,
ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு குமரி மாவட்டம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தூத்துக்குடி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு முரளிதரன் தலைமையில், கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி மற்றும் போலீசார் ஆரல்வாய்மொழியை அடுத்த முப்பந்தல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு சொகுசு கார் வேகமாக வந்தது. போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தினர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. உடனே போலீசார் ஜீப்பில், காரை துரத்தி சென்றனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று காரை மடக்கி பிடித்தனர்.
காரை சோதனை செய்த போது அதில் 36 பொட்டலங்கள் இருந்தன. ஒவ்வொரு பொட்டலத்திலும் தலா 2 கிலோ வீதம் 72 கிலோ கஞ்சா இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த 2 பேரை கைது செய்தனர்.
கைதானவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் தேனி மாவட்டம் உத்தம பாளையத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 24), கம்பத்தை சேர்ந்த பவுன்துரை (44) என்பது தெரியவந்தது.
இருவரும் ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கஞ்சாவை கடத்தி சென்றதும் தெரியவந்தது. பிடிபட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். இதுகுறித்து கன்னியாகுமரி போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.News