வேனில் கடத்தப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது
Views - 229 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
நாகர்கோவில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜெகன் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை குழித்துறையை அடுத்த எஸ்.டி.மங்காடு அருகே உள்ள மணக்கால பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக தூத்துக்குடி மாவட்ட பதிவெண் கொண்ட ஒரு பயணிகள் வேன் வந்தது.
அந்த வேனை போலீசார் தடுத்து நிறுத்தினர்.உடனே வேனை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓட முயன்றார். அதற்குள் போலீசார் டிரைவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கேரள மாநிலம் நெய்யாற்றங்கரையை சேர்ந்த பினு (வயது 40) என்பது தெரிய வந்தது.
பின்னர் போலீசார் வேனில் சோதனை நடத்தினர். அப்போது வேனுக்குள் பயணிகள் அமரும் இருக்கைகளில் தலா 50 கிலோ வீதம் 20 மூடைகளில் ஒரு டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் டிரைவர் பினுவை கைது செய்தனர்.
மேலும் ரேஷன் அரிசியுடன் வேனை பறிமுதல் செய்து நாகர்கோவிலில் உள்ள உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.
போலீசார் பினுவிடம் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:–
குமரி மாவட்ட கடற்கரை கிராமப்பகுதிகளில் ரேஷன் அரிசியை வீடு– வீடாக வாங்கி அவற்றை நள்ளிரவு அல்லது அதிகாலை நேரங்களில் கேரளாவுக்கு கடத்துவதையே பினு தொழிலாக செய்து வந்துள்ளார். இதற்காக தூத்துக்குடியை சேர்ந்த ஒருவரிடம் இருந்து பயணிகள் வேனை விலைக்கு வாங்கியுள்ளார். அதன் உரிமையாளரின் பெயரைக்கூட இன்னும் பினு மாற்றாமல் ஓட்டி வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு குளச்சல் பகுதியில் வீடு– வீடாக ரேஷன் அரிசியை வாங்கி மூடைகளாக கட்டி கேரளாவுக்கு கடத்தி சென்றபோதுதான் மணக்கால பகுதியில் போலீசாரிடம் சிக்கிய உள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை நாகர்கோவில் கோணத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் ஒப்படைத்தனர்.News