ஜூனியர் உலக கோப்பை ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு 217 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது
Views - 198 Likes - 0 Liked
-
நியூசிலாந்தில் நடந்து வரும் 12–வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் (19 வயதுக்குட்பட்டோர்) இறுதி ஆட்டம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. சாம்பியன் மகுடத்துக்கு முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.மவுன்ட் மாங்கானுவில் இந்திய நேரப்படி காலை 6:30 மணிக்குத் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்தது. பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணிக்குத் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அந்த அணி 59 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியின் இஷான் பரோல் மற்றும் கமலேஷ் நகர்கோட்டி ஆகியோர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்குக் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதையடுத்து, 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த உப்பல் மற்றும் மெர்லோ ஜோடி ஆஸ்திரேலிய அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், 34 ரன்களுடன் உப்பல் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்துவந்த மெக்ஸ்வீனி 23 ரன்களில் வெளியேறினார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுமுனையில் சிறப்பாக ஆடி மெர்லோ அரைசதம் அடித்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 250 ரன்களைக் கடந்துவிடும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், மெர்லோ 79 ரன்களில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி ரன் குவிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பாகப் பந்துவீசிய இந்திய அணி, 47.2 ஓவர்களில் 216 ரன்களில் ஆஸ்திரேலிய அணியை ஆட்டமிழக்கச் செய்தது. இதையடுத்து 217 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.இந்தத் தொடரில் இந்திய அணிதான் பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியைச் சந்திக்காமல் இறுதி போட்டிக்கு வந்திருக்கிறது. முன்னதாக லீக் சுற்றில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.2016-ம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை தொடரில் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் இந்திய அணி இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீசிடம் தோற்று இருந்தது. தவறுகளைச் சரி செய்து இந்த முறை ட்ராவிட்டின் இளம் படை கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.News