தூர்வாரப்படாததை கண்டித்து குளத்துக்குள் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
Views - 215 Likes - 0 Liked
-
களியக்காவிளை,
களியக்காவிளை அருகே குறுமத்தூரில் பாலகுளம் உள்ளது. இந்த குளம் சுமார் 6½ ஏக்கர் பரப்பளவு கொண்டது. கேரளாவில் இருந்து நெய்யாறு இடதுகரை சானல் வழியாக தண்ணீர் வந்து கொண்டிருந்த போது, அந்த தண்ணீரை பாலகுளத்தில் நிரப்பி சுற்று வட்டாரத்தில் உள்ள 500 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் விவசாயம் செய்து வந்தனர்.
நெய்யாறு இடதுகரை சானலில் தண்ணீர் வருவது நின்ற பின்பு, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளத்தில் மழை நீரை மட்டும் சேகரித்து நெல், வாழை, மரவள்ளிக்கிழங்கு போன்ற விவசாயம் செய்து வருகிறார்கள். மேலும், இந்த குளத்தின் உள்பகுதியில் குடிநீருக்காக இரண்டு கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குளத்தை தூர்வாருவதற்காக, பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஒப்பந்தகாரர் மூலம் தண்ணீரை திறந்து விட்டனர். ஆனால், 2 மாதங்கள் கடந்த பின்பும், தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், இந்த பகுதி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், நேற்று காலையில் இந்த பகுதியில் உள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் குளத்தில் கூடினர்.
குளத்தை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, குளத்தை தூர் வார உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு விட்டு பொதுமக்கள் கலைந்து சென்ற னர். குளத்தை தூர்வாராததை கண்டித்து குளத்துக்குள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.News