நாகர்கோவில் நகரின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் குழுவுடன் விஜயகுமார் எம்.பி. முக்கடல் அணையில் ஆய்வு
Views - 214 Likes - 0 Liked
-
பூதப்பாண்டி,நாகர்கோவில் நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக முக்கடல் அணை திகழ்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அணை அப்போதைய மக்கள் தொகையை கருத்தில் கொண்டு கட்டப்பட்டது. இந்த அணையின் நீர் கொள்ளளவு 25 அடி ஆகும். வறட்சியான காலங்களில் இந்த அணையில் மைனஸ் அளவிலும் 20 அடி வரை குடிநீருக்காக தண்ணீர் எடுக்க முடியும் என்பது இந்த அணையின் சிறப்பம்சமாகும்.தற்போது நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மராமத்து பணிகள் நடைபெறுவதின் காரணமாகவும், 3 தொட்டிகள் மூலமாக தண்ணீர் சுத்திகரிக்கப்படும் பணி தற்போது ஒரு தொட்டி மூலமாக சுத்திகரிப்பு செய்யப்படுவதாலும் நாகர்கோவில் நகராட்சி பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் நகர மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதை கருத்தில் கொண்ட விஜயகுமார் எம்.பி. நாகர்கோவில் நகரின் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண பல்வேறு குடிநீர் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்றாக முக்கடல் அணையின் கொள்ளளவை உயர்த்துவது, இதுபோன்ற மேலும் ஒரு அணையை புதிதாக உருவாக்கி மலையில் இருந்து பாய்ந்தோடி வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை இந்த அணைக்கு திருப்புவது போன்ற திட்டங்களை செயல்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.அவருடைய முயற்சியால் முக்கடல் அணையை மேலும் உயர்த்துவது தொடர்பாகவும், அதன் அருகிலேயே மற்றொரு அணையை கட்டுவது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசின் நீர் முதலீட்டு நிறுவன திட்ட அதிகாரி சுந்தரேசன், அண்ணா பல்கலைக்கழக நீர் மேலாண்மைத்துறை பேராசிரியர் சக்தி வடிவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று குமரி மாவட்டம் வந்தனர். பின்னர் அவர்கள் விஜயகுமார் எம்.பி. தலைமையில் முக்கடல் அணையை ஆய்வு செய்தனர். அப்போது நகராட்சி ஆணையர் சரவணக்குமார் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.ஆய்வின்போது விஜயகுமார் எம்.பி. கூறியதாவது:-50 அடியாக உயர்த்த...முக்கடல் அணையை தூர்வாரி அணையின் கொள்ளளவை 25 அடியில் இருந்து 50 அடியாக உயர்த்தவும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.அழகியபாண்டியபுரம் பகுதியில் உள்ள உலக்கை அருவியில் தடுப்பணை கட்டி அங்கிருந்து குழாய்கள் மூலம் தண்ணீரை முக்கடல் அணைக்கு கொண்டுவர திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதற்கு தமிழக அரசு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், தடிக்காரன்கோணம் பகுதியில் இருந்து செல்லும் தடவையாறு என்ற காட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி அந்த தண்ணீரை குழாய்கள் மூலம் முக்கடல் அணைக்கு கொண்டுவரும் திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு ரூ.140 கோடி செலவாகும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மழை காலங்களில் மலைகளில் இருந்து வரும் தண்ணீர் அணையில் சேர்க்கவும், ஊர்களில் இருந்து வரும் தண்ணீர் குளங்களில் சேர்ப்பது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். குமரி மாவட்டத்தில் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட அணைகளை இதுவரை எந்த அரசும் கண்டுகொள்ளவில்லை. மாவட்ட மக்களின் முக்கிய தேவையான குடிநீர் தேவைக்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.இதுபோன்று திட்டங்கள் செயல்படுத்தினால் குமரி மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க முடியும். முக்கடல் அணையை சுற்றிலும் மலைகள் சூழ்ந்துள்ளதால் நீரின் கொள்ளளவை மேலும் 25 அடி உயர்த்துவதற்கு வேறு தடங்கல்கள் இருக்காது. அணையை தூர்வாரி அந்த மண்ணை கொண்டே அணையை கட்டலாம்.நாகர்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளுக்கும் ஷிப்டு முறையில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கப்படும்.இவ்வாறு விஜயகுமார் எம்.பி. கூறினார்.இந்த ஆய்வின்போது, நாகர்கோவில் நகராட்சி குடிநீர் வழங்கும்பணி மேற்பார்வையாளர் ராஜா, நாகர்கோவில் நகர செயலாளர் சந்திரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கனகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றிருந்தனர்.News