வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: குமரி மாவட்டத்தில் ரூ.200 கோடி பணப்பரிவர்த்தனை பாதிப்பு
Views - 54 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
நாடு முழுவதும் வங்கி ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2012–ம் ஆண்டு 15 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இந்த சம்பள உயர்வு கடந்த 2017–ம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டது. எனினும் வங்கி ஊழியர்களுக்கு இன்னும் சம்பளம் உயர்த்தப்படவில்லை. எனவே இதுதொடர்பாக வங்கி ஊழியர்கள் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து 2 சதவீத ஊதிய உயர்வு வழங்க வங்கிகள் சம்மேளனம் முன் வந்தது.
ஆனால் இதை ஊழியர் சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஊதிய உயர்வை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் மே 30 மற்றும் 31–ந் தேதி ஆகிய 2 நாட்கள வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்தன. அதைத் தொடர்ந்தது இதுதொடர்பாக சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனாலும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே வங்கி ஊழியர்கள் திட்டமிட்டபடி நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
குமரி மாவட்டத்திலும் வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். ஊழியர்கள் யாரும் வேலைக்கு செல்லாததால் குறிப்பிட்ட சில வங்கிகள் தவிர பெரும்பாலான வங்கிகள் நேற்று மூடப்பட்டு இருந்தன. திறக்கப்பட்டிருந்த வங்கிகளிலும் ஊழியர்கள் இல்லாததால் வெறிச் சோடி காணப்பட்டது. நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் வங்கிகள் செயல்படவில்லை. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
மேலும் ஏ.டி.எம். மையம் பராமரிப்பாளர்களும் பணிக்கு செல்லவில்லை. பெரும்பாலான ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பப்படாமல் இருந்ததால் நேற்று மதியத்துக்கு பிறகு ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டது. பணம் இருந்த ஒரு சில ஏ.டி.எம். மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
இந்த நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வடசேரி ஸ்டேட் வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் தலை மை தாங்கினார். வனிதா, விஷ்ணு, இந்திரா, சாகுல் அமீது உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் குமரி மாவட்ட வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் கூறியதாவது:–
ஊதிய உயர்வு கேட்டு நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல் குமரி மாவட்டத்திலும் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கி உள்ளோம். குமரி மாவட்டம் முழுவதும் சுமார் 320 வங்கிகள் உள்ளன. இவற்றில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என சுமார் 1,400 பேர் பணியாற்றி வருகிறார்கள். தற்போதைய வேலை நிறுத்த போராட்டத்தில் அனைவருமே பங்கேற்றுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் அனைத்து வங்கிகளையும் சேர்த்து நாள் ஒன்றுக்கு சுமார் 200 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை நடைபெறுவது வழக்கம். ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதால் 200 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை பாதிப்பு அடைந்துள்ளது.
எனவே நாங்கள் வலியுறுத்தும் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். வங்கிகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன் திருப்பி செலுத்தப்படாமல் இருக்கிறது. இதன் காரணமாக டெபாசிட் பணத்தை கொண்டு வராக்கடனை ஈடுசெய்கிறார்கள். இதனால் தான் வங்கிகள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்படுகிறது. எனவே இதுதொடர்பாகவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.News