கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற ஆசிரியர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை
Views - 217 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
நாகர்கோவில் ராமன்புதூரைச் சேர்ந்தவர் லாரன்ஸ் (வயது 57). ஆசிரியரான இவர் தற்போது தம்மத்துக்கோணம் ஞானம் நகரில் வசித்து வருகிறார்.
நேற்று இவர் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். மனு கொடுத்துவிட்டு வெளியே வந்த லாரன்ஸ், கலெக்டர் அலுவலகத்தின் பிரதான வாசலின் அருகே சென்றதும் தனது சட்டைப்பையில் இருந்த பாட்டிலை எடுத்து, விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறி சத்தம்போட்டார்.
உடனே அங்கிருந்த போலீசார் ஓடிச்சென்று, அவரிடம் இருந்த விஷப்பாட்டிலை பறித்தனர். இருப்பினும் விஷத்தை அவர் குடித்துவிட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தால் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
விஷம் குடித்த ஆசிரியர் லாரன்சிடம் போலீசார் நடத்திய விசாரணையின்போது, கலெக்டர் அலுவலகத்தில் அவர் கொடுத்த மனுவின் நகல்களை காண்பித்து, அதில் உள்ள விவரங்களை தெரிவித்தார்.
அவர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-
நான் 1989-ம் ஆண்டு முதல் நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்தேன். இந்தநிலையில் பள்ளியில் ஏற்பட்ட சில பிரச்சினைகளாலும், பண நெருக்கடியின் காரணமாகவும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விருப்ப ஓய்வு பெற எழுதிக்கொடுத்தேன்.
15 மாதங்கள் ஆகியும் இதுவரை எனக்கு எந்த பணபலனும் கிடைக்கவில்லை. இதற்கு பள்ளிக்கூட தலைமை ஆசிரியரும், செயலாளரும்தான் காரணம். இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தேன். எனக்கு ஓய்வூதியம் மற்றும் பணபலன்களை பெற்றுத்தர சில அதிகாரிகளுக்கு பணமும் கொடுத்தேன். கலெக்டரிடம் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமிலும் மனு அளித்தேன். இதுவரை அதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதற்கிடையே எனக்கு கடன் கொடுத்தவர்கள் எனது வீட்டை எழுதி வாங்கிக் கொண்டதோடு, இன்னமும் பல லட்ச ரூபாய் தரவேண்டும் என்று கூறி கந்து வட்டி கேட்டு மிரட்டுகிறார்கள். இதுதொடர்பாக எனது மனைவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார். போலீஸ் நிலையம், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு ஆகியவற்றுக்கும் புகார் கொடுத்திருக்கிறோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவேதான் தற்கொலை முடிவை எடுத்தேன்.
எனவே இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு லாரன்ஸ் மனுவில் கூறியுள்ளார்.News