வாயின் உட்புற தோல் மூலம் சிறுநீர் குழாயை உருவாக்கி தொழிலாளிக்கு சிகிச்சை டாக்டர்கள் சாதனை
Views - 213 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர்கள், 2 நோயாளிகளுக்கு நவீன முறையில் சிறுநீர் குழாயை உருவாக்கி சிகிச்சை செய்து சாதனை படைத்திருக்கிறார்கள்.
சிறுநீர் குழாய் சுருக்கத்தால் பாதிக்கப்பட்டு, சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்ட நிலையில் கன்னியாகுமரி அருகே கோவளத்தை சேர்ந்த மீன்பிடி தொழிலாளி கினிஸ்டன் (வயது 37) என்பவர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்தபோது சிறுநீர்குழாய் 15 செ.மீ. நீளத்துக்கு சுருங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கினிஸ்டனுக்கு சிறுநீர் குழாயை உருவாக்கி சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். அதற்காக சிறுநீரக அறுவை சிகிச்சைத்துறை பேராசிரியர் எஸ்.ஆர்.கண்ணன் தலைமையில், உதவி பேராசிரியர்கள் பிராங்க் டேவிஸ் டேனியல், செல்வக்குமார், மயக்கவியல் மருத்துவ நிபுணர் ரவீந்திரன் ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர் கடந்த 1½ மாதத்துக்கு முன் சிகிச்சை அளித்தனர். வழக்கமாக சிறுநீர் குழாயை பெரிதாக்க பக்கத்தில் இருக்கும் தோலை எடுத்து செய்யப்பட்ட அறுவை சிகிச்சை முறைகள் நோயாளிகளுக்கு பலன் அளிக்கவில்லை. காரணம் அவற்றில் முடிகள் வளர்ந்து நோயாளிகளுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தின.
சிறுநீர் குழாயை பெரிதாக்க வாயின் உள்ளே இருந்து எடுக்கப்படும் தோல் சிறந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி கினிஸ்டனின் வாயில் இருந்து இரண்டு நீள தோல் துண்டுகளை எடுத்து துல்லியமாக 15 செ.மீ. நீளத்துக்கு சிறுநீர் குழாயை உருவாக்கி அறுவை சிகிச்சை மிக நேர்த்தியான முறையில் செய்யப்பட்டது. தற்போது அந்த சிறுநீர் குழாயை கருவிகளை செலுத்தி பார்த்தபோது சாதாரணமாக சிறுநீர் குழாய் எப்படி இருக்குமோ? அப்படி மாறி இருந்தது. தற்போது அவரால் எந்தவித சிரமமும் இல்லாமல் சிறுநீர் கழிக்க முடிகிறது.
இதேபோல் செண்பகராமன்புதூர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான தட்சிணாமூர்த்தி (53) என்பவர் சிறுநீரகத்தில் உருவான மான்கொம்பு போன்ற வடிவிலான பெரிய கல் அடைப்பால் (6 செ.மீ.) பாதிக்கப்பட்ட நிலையில் ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு பி.சி.என்.எல். (பெர் குட்டோனியஸ் நெப்ரோ லித்தாட்டமி) என்ற நவீன சிகிச்சை முறையில் திறந்த அறுவை சிகிச்சை இன்றி சிறுநீரக கல் நேற்று அகற்றப்பட்டது.
தற்போதைய நவீன மருத்துவ கருவிகள் மூலம் சிறுநீரக பகுதியில் ஒரு துளைபோட்டு, குழாய் செலுத்தி கற்களை உடைத்து வெளியே எடுக்கும் சிகிச்சைக்கு பி.சி.என்.எல். சிகிச்சை முறை ஆகும். இதனால் அவரும் நலமாக இருக்கிறார். நாளை (அதாவது இன்று) அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்.
சிறுநீரகத்தில் ஏற்படும் பெரிய கற்கள் மான்கொம்பு வடிவில் இருக்கும். இதை திறந்த அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடலாம். ஆனால் அந்த நோயாளி வழக்கமான பணிகளில் ஈடுபட குறைந்தது 6 மாதங்கள் ஆகும். ஆனால் நவீன சிகிச்சையான பி.சி.என்.எல். முறையில் கற்களை அறுவை சிகிச்சை இன்றி அகற்றுவதால் 2 நாளில் அவர் வீடு திரும்பி, வழக்கமான வேலைகளில் ஈடுபடலாம். இதற்கு தேவையான சி-ஆர்ம் கருவி, நெப்ரோஸ்கோப், எச்.டி. கேமரா அன்ட் மானிட்டர், லித்தோகிளாஸ்ட், டிஸ்போசபிள்ஸ் கருவிகள் நமது ஆஸ்பத்திரியில் இருப்பதால் இந்த சிகிச்சையை எளிதாக செய்ய முடிகிறது.
இவ்வாறு டீன் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன் கூறினார்.
சிறுநீர் குழாய் அடைப்புக்கு நவீன சிகிச்சை அளிக்கப்பட்ட கினிஸ்டன் கூறும்போது, “சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்ட என்னால் தற்போது சாதாரணமாக சிறுநீர் கழிக்க முடிகிறது. அதனால் எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்“ என்றார்.
டீன் பேட்டி அளித்தபோது ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவ அதிகாரி ஆறுமுகவேலன், உதவி உறைவிட மருத்துவ அதிகாரிகள் ரெனிமோள், கலைக்குமார் மற்றும் டாக்டர்கள் கண்ணன், பிராங்க் டேவிஸ் டேனியல், செல்வக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.News