குளச்சல் அருகே பயங்கர சீற்றம்: கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு
Views - 55 Likes - 0 Liked
-
குளச்சல்,
குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும். அதேபோல் இந்த ஆண்டும் கடல் சீற்றம் காணப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சீற்றத்தின் காரணமாக கடல் நீர் திடீரென அழிக்கால் கிராமத்திற்குள் புகுந்தது. இதனால் ஏராளமான மீனவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே நேற்று குளச்சல் அருகே ஏற்பட்ட பயங்கர சீற்றத்தால் கடல் நீர் வாணியக்குடி ஊருக்குள் புகுந்தது. மேலும் அங்கு 20-க்கும் மேற்பட்ட வீடுகளை கடல் நீர் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மீனவர்கள் அச்சமடைந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்தும் கடல் சீற்றம் நாள் முழுவதும் இருந்தது. எனவே, வாணியக்குடியில் உள்ள ஏராளமான மீனவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சைமன் காலனி கிராம நிர்வாக அதிகாரி கில்டா, குளச்சல் வருவாய் ஆய்வாளர் பிரவுன் சுந்தர் மற்றும் பங்குதந்தை ஆன்றோ மற்றும் பலர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் பாதுகாப்பான இடத்தில் தங்கிய மீனவர்களை பார்த்து ஆறுதல் கூறி உதவிகள் செய்தனர்.
இதுகுறித்து வாணியக்குடி பங்குதந்தை ஆன்றோ கூறுகையில், வாணியக்குடி பகுதியில் கடல் சீற்றத்தால் அவ்வப்போது கடல் நீர் ஊருக்குள் புகுந்து விடுகிறது. அதே நிலைமை தான் தற்போதும் ஏற்பட்டுள்ளது. கடல் நீர் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் பாதுகாப்பான வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவம் நிகழாமல் இருப்பதற்காக இந்த பகுதியில் கடல் சீற்றத்தை தடுக்க அலை தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.News