தொழில் அதிபர் வீட்டில் கொள்ளை முயற்சி கவரிங் நகை மட்டும் இருந்ததால் மர்ம நபர்கள் ஏமாற்றம்
Views - 241 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே காமராஜர் நகர் சிதம்பரநாதன் தெருவை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 60), தொழில் அதிபர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன், தன் மகனை பார்ப்பதற்காக சென்னைக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார். இதனால் வீட்டில் யாரும் இல்லை.
இந்த நிலையில் நேற்று காலை ரவீந்திரனின் வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக இதுபற்றி ரவீந்திரனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உறவினர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. பீரோ மற்றும் மேஜையும் திறந்திருந்தது. இதைப் பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இரவில் யாரோ மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து இருந்தது தெரியவந்தது.
உடனே நேசமணிநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ரவீந்திரன் தனது வீட்டில் நகை, பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் வைத்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பீரோவில் கவரிங் நகை மட்டும் இருந்ததாக தெரிகிறது. இதனால் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்களுக்கு கொள்ளை அடித்துச் செல்ல எதுவும் கிடைக்கவில்லை. பீரோவில் கவரிங் நகை மட்டுமே இருந்ததால் மர்ம நபர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.News