குமரி மாவட்டத்தில் 23 பேருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை
Views - 256 Likes - 0 Liked
-
குமரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அப்படி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரியை பரிசோதனை செய்த போது அவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அப்படி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் உள் நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிலும் பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களுக்கு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் தனிவார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இன்னும் சிலர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகர்கோவில் சற்குணவீதி பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியை திரேசா (60) என்பவர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானார். குமரி மாவட்டத்தில் இதுவரை சுமார் 50 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறதுஆனால் குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 23 பேர் பன்றிக்காய்ச்சல் அறிகுறியோடு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களில் 8 பேர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சல் வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 2 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள், 3 சிறுவர்- சிறுமிகள் என 8 பேர் ஆவர்.இவர்களில் 2 வயது பெண் குழந்தை, 6 வயது சிறுவன், 2 பெண்கள், ஒரு ஆண் என 5 பேர் நேற்று முன்தினம் ஒரே நாளில் பன்றிக்காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 14 பேர் தக்கலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இதுகுறித்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் பாலசுப்பிரமணியன் கூறுகையில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி பன்றிக்காய்ச்சல் வார்டில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒருவர் இங்கிருந்து திருவனந்தபுரம் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். இதுதவிர கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சாதாரண நாட்களில் 10 பேர் 20 பேர்தான் காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சை பெற வருவார் கள். ஆனால் கடந்த சில தினங்களாக நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 பேர் காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு வருகிறார்கள். அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் மருந்து, மாத்திரைகள் வாங்க வசதியாக தனி கவுண்ட்டர் ஏற்படுத்தி உள்ளோம் என்றார்.மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மதுசூதனன் கூறுகையில், குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் 23 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். டெங்கு கொசு ஒழிப்பு பணி மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் 1200 பேரும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் 800 பேரும் ஆக மொத்தம் 2 ஆயிரம் பேர் ஈடுபட்டு வருகிறார்கள். பன்றிக்காய்ச்சல் குறித்து வீடு வீடாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் இந்த துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பிருந்து பள்ளிகளில் கைகளை சுத்தமாக கழுவுவது தொடர்பாகவும், அதன்மூலம் பன்றிக்காய்ச்சல் பரவுவதை எவ்வாறு தடுக்கலாம்? என்பது தொடர்பாகவும் மாணவ- மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்றார்.News