இளைஞர் காங்கிரஸ் சார்பில் குமரி-காஷ்மீர் புரட்சி பயண ரதயாத்திரை திருநாவுக்கரசர்- உம்மன்சாண்டி தொடங்கி வைத்தனர்
Views - 242 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் சார்பில் இந்திய அரசியலமைப்பை காக்கவும், தேசத்தை காக்கவும் வலியுறுத்தி குமரி முதல் காஷ்மீர் வரையிலான புரட்சி பயண ரத யாத்திரை நேற்று நாகர்கோவிலில் இருந்து தொடங்கியது. இதற்கான தொடக்க விழா நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் மாலையில் நடந்தது.விழாவுக்கு அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் கேசவ் சந்த் யாதவ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சீனிவாஸ் முன்னிலை வகித்தார். தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் வரவேற்று பேசினார். அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், தமிழக பார்வையாளருமான சஞ்சய்தத் வாழ்த்தி பேசினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான உம்மன்சாண்டி ஆகியோர் கொடியசைத்து புரட்சிபயண ரதயாத்திரையை தொடங்கி வைத்து பேசினர்.
திருநாவுக்கரசர் பேசும்போது கூறியதாவது:-
இளைஞர் காங்கிரஸ் கட்சியின் முதுகெலும்பு மாதிரி. 130 ஆண்டுகளை கடந்து இந்த கட்சி செயல்படுகிறது என்றால் இளைஞர்கள் தான் காரணம். இளைஞர்கள் ராகுல்காந்தியை நம்பி வருகின்றனர். அவர் பிரதமராக வரவேண்டும் என்று விரும்பி வருகிறார்கள். அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் கேசவ் சந்த் யாதவ் இன்று ரதயாத்திரையை தொடங்குகிறார். 48 நாட்கள் இந்த பயணம் நடைபெற உள்ளது. 48 நாட்கள் என்பதை ஒரு மண்டலம் என்பார்கள். இந்த மண்டல யாத்திரை பா.ஜனதா என்ற நோயை குணப்படுத்தி, அதற்கு காரணமாக இருக்கிற மோடியை அகற்றி, காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் தந்து, ராகுல்காந்தியை பிரதமராக்குகிற வாய்ப்பை அஸ்திவாரமிடுவதாக அமைய வேண்டும்.
48 நாட்களில் 22 ஆயிரம் கி.மீ. தூரம் நாடு முழுவதும் இந்த யாத்திரை செல்கி றது. இளைஞர்களின் இந்த யாத்திரையை முக்கடலும் சங்கமிக்கும் புண்ணிய பூமியான குமரி மாவட்டத்தின் நாகர்கோவிலில் இருந்து தொடங்குவதை நான் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன். காங்கிரஸ் கட்சி இருக்கிற மாவட்டங்களிலேயே பலமாக, வலுவாக இருக்கும் மாவட்டம் குமரி மாவட்டம். இந்த மாவட்டம் போன்று தமிழகம் முழுவதும் இருந்தால் காங்கிரஸ் ஆட்சியை, பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை நாளையே ஏற்படுத்த முடியும்.
நாடு முழுவதும் பா.ஜனதா மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த பயணத்திற்காக உழைத்த அத்தனை நிர்வாகிகளையும் வாழ்த்துகிறோம்.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.
கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி பேசுகையில், ‘இன்று நமக்கு ஒரு புதிய விடியலான நாளாகும். பா.ஜனதாவை வீழ்த்தி மூன்று முதல்வர்கள் இன்று ஒரே நாளில் பதவி ஏற்றுள்ளனர். மூன்று மாநில முதல்வர்கள் பொறுப்பேற்பு மற்றும் இளைஞர் காங்கிரஸ் ரதயாத்திரையால் நம்பிக்கை பிறந்துள்ளது.’ என்றார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், வசந்தகுமார், விஜயதரணி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் நவீன்குமார், முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி.ராமசுப்பு, பொதுக்குழு உறுப்பினர் தயாபரன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் நரேந்திரதேவ் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை செல்வக்குமார் தொகுத்து வழங்கினார்.
பின்னர் இளைஞர் காங்கிரஸ் ரதம் நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்டுச் சென்றது. ரதம் பாராளுமன்ற மாதிரியில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. அதில் மகாத்மா காந்தி, ராகுல் காந்தி உருவப்படங்கள், இளைஞர் காங்கிரஸ் கொடி, சின்னம் போன்றவை இடம் பெற்றிருந்தது.News