உள்ளாட்சி தேர்தல்: அனைத்து கட்சியினருடன் கலெக்டர் ஆலோசனை
Views - 242 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப்பணிகள் நடக்கின்றன. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சியினருடனான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய் கூட்டரங்கில் நேற்று நடந்தது.கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் ராகுல்நாத் முன்னிலை வகித்தார். ஒப்புதல் அளிக்கப்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாகராஜன் தெரிவித்தார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் தோவாளை ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், தி.மு.க. சார்பில் லீனஸ்ராஜ், காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மற்றும் பா.ஜனதா கோட்ட இணை அமைப்பு செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டு உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்தனர்.
பின்னர் அதிகாரிகள் பேசுகையில், “நாகர்கோவில் மாநகராட்சியில் 212 வாக்குச்சாவடிகள் இருந்தன. அது தற்போது 206 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. 1500 பேருக்கு ஒன்று என்ற அடிப்படையில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது“ என்றனர். மேலும் நாகர்கோவில் மாநகராட்சியாக மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் மாநகராட்சி பதவிகள் பற்றி அரசியல் கட்சியினருக்கு எடுத்துரைக்கப்பட்டது. ஒவ்வொரு பூத்திலும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் எண்ணிக்கையும் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் பேசுகையில், “நாகர்கோவிலில் கடந்த தேர்தலில் சில வாக்குச்சாவடிகள் மக்கள் வசிக்கும் இடத்தில் இல்லாமல் சற்று தொலைவில் அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் மக்கள் வாக்களிப்பதில் சிரமம் ஏற்பட்டது. எனவே உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடிகளை மக்கள் வசிக்கும் இடத்தின் அருகிலேயே அமைக்க வேண்டும்“ என்று கூறினார்கள்.
இதுதொடர்பாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் பதில் அளித்தனர்.News