மார்த்தாண்டத்தில் ரூ.1 கோடி குட்கா பறிமுதல்: தொழில் அதிபர் உள்பட 4 பேர் கைது
Views - 258 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
மார்த்தாண்டம் பகுதியில் குட்கா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மார்த்தாண்டம் மார்க்கெட் பகுதியில் மொத்த வியாபார கடை நடத்தி வரும் நல்லூர் பகுதியை சேர்ந்த சத்தியநேசன் (வயது 65), அவருடைய மகன் ஆனந்த சத்யா (34) ஆகியோர் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து குட்காவை முகமது அலி என்பவர் வாங்கி மாவட்டம் முழுவதும் சிறு சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.இதையடுத்து தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார் மார்த்தாண்டம் மார்க்கெட் பகுதியில் உள்ள சத்தியநேசனின் கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் ஏராளமாக இருந்தன. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் கேதேஸ்வரம் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான 2 குடோன்களில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த குடோன்களில் சோதனையிட்ட போது மூடை மூடையாக குட்கா பொருட்கள் இருந்தன. அதனை பறிமுதல் செய்த போலீசார் குட்கா பொருட்கள் 35 டன் எடையும், அதன் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று கூறினர்.
இதையடுத்து சத்தியநேசன், அவருடைய மகன் ஆனந்த சத்யா, முகமது அலி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம், ஆனந்த சத்யா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
குட்கா போன்ற போதை பொருட்களை பெங்களூருவில் இருந்து லாரிகளில் கடத்தி வந்து பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகிறோம். இந்த பொருட்களை பதுக்கி வைப்பதற்காக தொழில் அதிபர் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான 2 குடோன்களை வாடகைக்கு எடுத்தோம். அந்த குடோனில் குட்கா பொருட்களை பதுக்கி வைக்கும் போது ஏற்படும் வாசனை வெளியே தெரியாமல் இருக்கவும், அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்கவும் குடோனின் முன்பு பழ குடோன் அமைத்து இருந்தோம்.
இங்கிருந்து சொகுசு கார்கள் மூலமாக கேரளாவுக்கு கடத்தி சென்று விற்பனை செய்வோம். அங்கு போதை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் சம்பாதித்தோம். மேலும், கேரளாவை சேர்ந்த சில சிறிய வியாபாரிகள் மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டத்துக்கு வந்து குட்கா பொருட்களை வாங்கி செல்வார்கள். மேலும், புகையிலை பொருட்களை சிறு சிறு பாக்கெட்டுகளில் அடைத்து, முன்னணி கம்பெனிகளின் லேபிள் ஒட்டி விற்பனை செய்தோம்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பாக்கெட்டுகளில் அடைக்க பயன்படுத்திய உபகரணங்கள், மற்றும் லேபிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே குடோனை வாடகைக்கு விட்டதாக தொழில் அதிபர் செல்வராஜையும் போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் குழித்துறை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்ட சத்திய நேசன், ஆனந்த சத்யா, முகமது அலி ஆகியோர் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் மேலும் யாருக்காவது தொடர்பு உண்டா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.News