ரூ.581 கோடி மோசடி: நிதி நிறுவனத்தில் அடகு வைத்த நகையை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை
Views - 300 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
குமரி மாவட்டம் மத்தம்பாலையில் நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதன் கிளை நிறுவனங்கள் பளுகல், மேல்பாலை, இளஞ்சிறை மற்றும் குந்நத்துக்கால் ஆகிய 4 இடங்களில் செயல்பட்டன. இந்த நிதி நிறுவனத்தை நிர்மலன் என்பவர் நிர்வகித்து வந்தார். இங்கு ஏராளமான கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டதால் குமரி மற்றும் கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்களாக சேர்ந்து பணத்தை டெபாசிட் செய்தனர்.இந்த நிலையில் கடந்த 15-9-2017 அன்று நிதி நிறுவனத்தை மூடிவிட்டு நிர்மலன் தலைமறைவாகி விட்டார். இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், தாங்கள் டெபாசிட் செய்த பணம் எப்படியாவது கிடைத்து விடாதா? என்ற எண்ணத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
ரூ.581 கோடி மோசடி
இதற்கிடையே பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் நாகர்கோவிலில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த வகையில் மொத்தம் 8 ஆயிரத்து 426 புகார்கள் அளிக்கப்பட்டன. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், நிதி நிறுவனத்தில் டெபாசிட் செய்த ரூ.581 கோடியை மோசடி செய்து விட்டு நிர்மலன் தலைமறைவானது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நிர்மலன் உள்பட மொத்தம் 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான வாகனங்கள் மற்றும் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
நிர்மலனிடம் விசாரணை
இதற்கிடையே தலைமறைவாக இருந்த நிர்மலன் மதுரையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது மோசடி செய்த பணத்தில் நிர்மலன் எங்கெல்லாம் சொத்துகள் வாங்கி உள்ளார்? அதற்கான ஆவணங்கள் எங்குள்ளன? என்றெல்லாம் விசாரித்தனர். அதோடு சம்பந்தப்பட்ட சொத்துகளுக்கான ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். அதன்பிறகு அவர் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். மேலும் நிர்மலனின் சொத்துகள் பற்றிய விவரங்களையும் தாக்கல் செய்து இருக்கிறார்கள்.
நகையை திரும்ப பெறலாம்
இந்த நிலையில் நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்தில் நகையை அடகு வைத்தவர்கள் 25-ந் தேதி (நேற்று) முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந் தேதி வரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தை அணுகி அடகு தொகையுடன் வட்டியும் சேர்த்து செலுத்தி நகையை திரும்ப பெற்று கொள்ளலாம் என்று போலீசார் அறிவித்தனர். அதன்பேரில் நகையை அடகு வைத்தவர்கள் நேற்று பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் திரண்டனர். பின்னர் தாங்கள் அடகு வைத்த நகைக்கான ரசீது மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
காலஅவகாசம்
இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்தில் நகையை அடகு வைத்தவர்கள் அதை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் இன்னும் இருக்கிறது. எனவே காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை எப்போது வேண்டுமானாலும் போலீஸ் நிலையத்தை அணுகலாம்.
முதல் நாளான இன்று (நேற்று) குமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் வந்திருந்தனர். ஆனால் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் இன்னும் நகையை மீட்க வரவில்லை. அவர்கள் நாளை (இன்று) வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக நகை அடகு வைத்ததற்கான ரசீது மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை வாங்கியுள்ளோம். அடகு தொகையை வட்டியுடன் செலுத்திய பின்னர் வருகிற 3-ந் தேதி அன்று வருவாய் அதிகாரி மூலமாக நகைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்“ என்றார்.
பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒரே நாளில் ஏராளமானோர் திரண்டதால் போலீஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.News