தளர்வுகள் இல்லாத 3-வது ஞாயிற்றுக்கிழமை: முழு ஊரடங்கால் வெறிச்சோடிய குமரி மாவட்டம்
Views - 305 Likes - 0 Liked
-
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு 6-வது முறையாக கடந்த 1-ந் தேதி முதல் 31-ந்தேதி வரை ஊரடங்கை நீடித்து உத்தரவிட்டது. அத்துடன் ஜூலை மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்த விதமான தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று 3-வது ஞாயிற்றுக்கிழமையாக முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. நாகர்கோவில் நகரில் பால் கடைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனைகள் மட்டும் திறந்திருந்தன. மற்ற அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன.
வெறிச்சோடிய சாலைகள்
நாகர்கோவில் நகரின் கடைவீதிகள் அனைத்தும் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடந்தது. குறிப்பாக கோட்டார் பஜார், வடசேரி, மணிமேடை சந்திப்பு பகுதி, பாலமோர் ரோடு, மீனாட்சிபுரம், கோர்ட்டு ரோடு, கே.பி.ரோடு, கேப்ரோடு, கிருஷ்ணன்கோவில், வெட்டூர்ணிமடம், பார்வதிபுரம், செட்டிகுளம், ராமன்புதூர், பீச்ரோடு, இடலாக்குடி, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சந்திப்பு பகுதி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கடைவீதிகள் மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் இன்றி வெறிச்சோடியது.
நகரின் முக்கிய சாலைகளான கேப் ரோடு, கே.பி.ரோடு, பாலமோர் ரோடு, திருவனந்தபுரம் ரோடு, நாகர்கோவில் திருநெல்வேலி ரோடு உள்பட அனைத்து சாலைகளும் ஆள் அரவமின்றி காட்சி அளித்தன. அவசர தேவைக்காக ஒன்றிரண்டு இருசக்கர வாகனங்கள் மட்டும் அங்குமிங்கும் சென்று வந்தன.
மார்த்தாண்டம்
குமரி மாவட்டத்தின் 2-வது பெரிய நகரமான மார்த்தாண்டம் முழு ஊரடங்கால் வெறிச்சோடியது. தேசிய நெடுஞ்சாலை, மார்க்கெட் சாலை, வடக்குத்தெரு, பம்மம், குழித்துறை, வெட்டுவெந்நி போன்ற பகுதிகளில் மளிகை கடைகள், ஓட்டல்கள், ஜவுளி கடைகள், பெட்ரோல் பங்கு, தனியார் நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் செயல்பட்டு வந்த காய்கறி சந்தை, லாரி பேட்டையில் செயல்பட்ட மீன் சந்தை போன்றவை முற்றிலுமாக மூடப்பட்டன. மார்த்தாண்டம் மேம்பாலம் உள்பட நகரம் முழுவதும் வாகன போக்குவரத்து இன்றி காணப்பட்டது.
களியக்காவிளை
குமரி-கேரள எல்லையான களியக்காவிளையில் முழு ஊரடங்கால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின. களியக்காவிளை காய்கறி சந்தை, மீன்சந்தை, பி.பி.எம். சந்திப்பில் உள்ள வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. எல்லையில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் வழக்கம் போல் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தன. மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
குளச்சல்
குளச்சல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான லட்சுமிபுரம், உடையார்விளை, ரீத்தாபுரம், குறும்பனை, வாணியக்குடி, கோடிமுனை, சைமன்காலனி, மண்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின. மீனவர்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியதால் குளச்சல் மீன்பிடி துறைமுகம் ஆள்நடமாட்டம் இன்றி காணப்பட்டது. அத்தியாவசிய தேவைக்காக பால் விற்பனை நிலையங்கள், மருந்து கடைகள் மட்டும் திறந்து இருந்தன. அவசியமின்றி சாலைகளில் சுற்றித்திரிபவர்களை கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
தக்கலை
தக்கலை பகுதியிலும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. எப்போதும் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடியது. தக்கலையில் ஓட்டல்கள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள், ஜவுளிக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.
குலசேகரம்
குலசேகரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளான திருநந்திக்கரை, உண்ணியூர்கோணம், பொன்மனை, செருப்பாலூர், திற்பரப்பு போன்ற பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. குலசேகரம் பகுதியில் மருத்துவமனை மற்றும் அத்தியாவசிய தேவைக்கு செல்லும் மக்கள் மட்டுமே வெளியே சென்றனர். பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.
சுற்றுலா தலமான திற்பரப்பு அருவிக்கு ஊரடங்கு காரணமாக ஏற்கனவே சுற்றுலா பயணிகள் வருகை முற்றிலுமாக நின்றது. நேற்று திற்பரப்பு பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
அருமனை
அருமனை, மேலத்தெரு, நெடியசாலை, நெடுங்குளம், களியல், முழுக்கோடு போன்ற பகுதிகள் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு, ஆட்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின. ரப்பர் தோட்டங்களுக்கு பால் வெட்ட செல்லும் தொழிலாளர்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கினர்.
கன்னியாகுமரி
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு, ரெயில் நிலைய சந்திப்பு உள்பட பல இடங்களில் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆரல்வாய்மொழி
ஆரல்வாய்மொழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான செண்பகராமன்புதூர், தோவாளை, வெள்ளமடம், மாதவலாயம், அனந்தபத்மநாபபுரம் போன்ற இடங்களில் அனைத்து கடைகளும், ஓட்டல்களும் மூடி கிடந்தன. தோவாளை பூ மார்க்கெட் மூடப்பட்டதால் வியாபாரம் நடை பெறவில்லை. ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அத்தியாவசிய தேவைக்காக இ-பாஸ்சுடன் வந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
அழகப்பபுரம்
அழகப்பபுரத்தில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கை முன்னிட்டு டீக்கடைகள், பெட்டிக்கடைகள், மளிகை கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. பால் விற்பனை நிலையங்கள், மருந்து கடைகள் மட்டுமே செயல்பட்டன. சாலைகளில் மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடின. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் ஒருசில இருசக்கர வாகனங்கள் இயங்கின.
இதேபோல் கொல்லங்கோடு, திருவட்டார், திங்கள்சந்தை, வில்லுக்குறி, இரணியல், பேயன்குழி, இறச்சகுளம், திட்டுவிளை, பூதப்பாண்டி, தெரிசனங்கோப்பு, அருமநல்லூர் உள்ளிட்ட பகுதியிலும் மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்களை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு அத்தியாவசிய தேவையின்றி வாகனத்தில் சுற்றித்திரிபவர்களை எச்சரித்து அனுப்பினர். பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன
News