பாதியில் நிறுத்தப்பட்ட பால வேலை பொதுமக்கள் பலத்த எதிர்ப்பு
Views - 308 Likes - 0 Liked
-
குமரி மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலா தலமான மாத்தூர் தொட்டிபாலம் செல்லும் முக்கியமான சாலை பூவன்கோடு – குமரன்குடி சாலை இந்த சாலையில் குமரன்குடி பகுதியில் வாய்கால் ஒன்று குறுக்கிடுகிறது.
இதனை கடப்பதற்க்கு அமைக்கப்பட்டிருந்த பாலம் அகலம் குறைவாகவும் பழமையானதாகவும் இருந்ததால் சுற்றுலா வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் இதனை கடப்பதற்க்கு சிரமப்பட்டு வந்ததுடன் விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. இதனால் இதனை மாற்றி புதியதாக அகலபடுத்தி அமைக்க வேண்டுமென்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் இங்கு புதிய பாலம் கட்ட நெடுஞ்சாலை துறை 25 லட்சம் செலவில் திட்டம் தயார் செய்து நிதி ஒதுக்கீடு செய்ததையடுத்து சில மாதங்களுக்கு முன் பழைய பாலம் உடைத்து அப்புறப்படுத்தப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. பாலத்திற்கான பக்கச்சுவர்கள் அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில் மழை பெய்து வாய்காலில் தண்ணீர் அதிக அளவு பாய்வதால் மேற்கொண்டு அடித்தள பணிகள் செய்யப்படாமல் கடந்த 2 மாதங்களாக பணிகள் முடங்கி கிடந்தது. உடனடியாக பாலம் வேலை நிறைவடைந்து போக்குவரத்து துவங்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்த நிலையில் பால பணிக்காக சாலை துண்டிக்கப்பட்டு கிடப்பதால் குமரன்குடி, முதலார், அணக்கரை போன்ற பகுதிகளை சேர்ந்த மக்கள் போக்குவரத்திற்க்கு பெரும் அவதிப்பட்டு வந்தனர். இதனால் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வேர்கிளம்பி பேரூராட்சி முன்னாள் தலைவி ஜெயா மனோகரன் தலைமையில் மாவட்ட ஆட்சி தலைவரிடம் வலியுறுத்தப்பட்டது. இந்தநிலையில் ஒப்பந்தகாரர் தரப்பினர் பணி செய்வதற்க்குரிய உபகரணங்களை வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்ல முயன்றனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து குமரன்குடி ஊராட்சி தலைவர் பால்சன் தலைமையில் உபகரணங்கள் ஏற்றிய வாகனம் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டது. மா. கம்யூ., திருவட்டார் வட்டார செயலாளர் வில்சன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட குழு உறுப்பினர்கள் சகாயஆன்டனி, ரவி, குமரன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சுந்தர்ராஜ், நீதியரசர் உட்பட கலந்துகொண்டனர். இதனையடுத்து தகவலறிந்து அங்கு வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பிரச்னை கைவிடப்பட்டது.
News