குமரி மாவட்டத்தில் திருமணம் நடத்த சில தளர்வுகள்
Views - 315 Likes - 0 Liked
-
குமரி மாவட்டத்தில் திருமணம் நடத்த சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால், திருமணம் நடத்த அனுமதி கேட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தினமும் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.
ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் கூடும் பகுதிகள் திருமண மண்டபங்கள் மூடப்பட்டன. ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற வேண்டிய பல திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டன.
ஆறு மாதங்கள் ஆகியும் திருமண மண்டபங்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. அரசு அறிவித்த உத்தரவின்படி அனுமதி பெற்று சமூக இடைவெளியுடன் குறிப்பிட்ட நபர்களுடன் திருமணம் நடத்தலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு திருமணம் நடத்த விரும்புவோர் அதற்கான அனுமதி கடிதத்தை கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. குமரி மாவட்டத்தில் திருமணம் நடத்த அனுமதி கேட்டு ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வருகின்றனர்.
இதற்காக கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் இரண்டு அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் விண்ணப்பிக்கும்போது ஆதார் கார்டு, திருமண அழைப்பிதழ் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரிகள் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை பெற்றுக் கொண்டு அதனை விசாரித்து அனுமதி கடிதம் வழங்கி வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் தினமும் ஏராளமானோர் திருமணம் நடத்துவதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்து வருகின்றனர்
News