தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் நேற்று அமல்படுத்தப்பட்ட நிலையில், குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம் உள்ளிட்ட 12 பணிமனைகளில் இருந்து 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டன.
குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசின் அறிவுறுதலின் படி பல்வேறு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஊரடங்கின் 4 வது தளர்வுகள் நேற்று அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன் படி பொது போக்குவரத்துக்கு நேற்று துவங்கியது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் மாவட்டத்திற்கு உள்ளான அரசு பேருந்துகளின் சேவை துவங்கியது. குமரி மாவட்டத்தில் 50 சதவிகித அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டன. மேலும், மாவட்டத்தில் இயக்கப்படும் பேருந்துகள் முழுவதும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்ட பின்னரே இயக்கப்படுகிறது. அதே போன்று ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு சோதனை செய்த பின்னரே பணிமனையில் இருந்து பேருந்துகள் வெளியேற்றப்படுகின்றன. அதே போல் முக கவசம் அணிந்து வரும் பயணிகள் மட்டுமே பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். நீண்ட நாட்களுக்கு பின்னர் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளன.