வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்
Views - 245 Likes - 0 Liked
-
குமரி மாவட்டம் திங்கள் நகரில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தெரியாமல் ரகசியமாக அதிகாரிகள் கடத்தியதாக அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.
குமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகருக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கு அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்திற்குள் உள்ள பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வரப்பட்டு இயந்திரங்களில் ஏற்கனவே பதிவான வாக்குகளை அழிக்கும் பணி மற்றும் பழுதான இயந்திரங்களை சரிபார்க்கும் பணி நடந்தது. இந்த பணியில் திருச்சி பெல் நிறுவன பொறியாளர்கள் மற்றும் மாவட்ட அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இப்பணிகள் நடந்தன. இந்நிலையில் இங்கு இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை அதிகாரிகள் ரகசியமாக வெளியே கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதை அறிந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த வளாகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து இரணியல் போலீசார் அரசியல் கட்சிகளோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்
News