கர்நாடக சிறையில் வாடும் குமரிமாவட்டத்தை சேர்ந்த மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க மீன்வளத்துறை அமைச்சரிடம், மீனவ பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
கன்னியாகுமரி வில்லியம் மகன் டென்னிஸ் (56), பிள்ளைதோப்பு சின்னப்பன் மகன் ராபின்சன்(36), வாவத்துறை அந்தோணிமுத்து மகன் அருள்ராஜ்(42), மணக்குடி செல்லதம்பி மகன் ஜோசப்(50), அழிக்கால் ஸ்டான்லி மகன் அருள்சீலன்(40), கடியபட்டணம் செல்வம் மகன் சுபின்(20), முட்டம் ஜேம்ஸ் மகன் ரோஸிகன்(18), பெரியவிளை விக்டர் மகன் சாமுவேல்(18), எறும்புகாடு ராஜன் மகன் சக்ரியா ஆகிய 10 மீனவர்கள் கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி கேரளமாநிலம் கோழிகோடு மாவட்டம் வேப்பூர் பகுதியை சேர்ந்த உஸ்மான் என்பவருக்கு சொந்தமான இந்தியன் விசைபடகில் கர்நாடக மாநிலம் மால்பே என்ற இடத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். கரையில் இருந்து 23 நாட்டிக்கல்மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அத்துமீறி மீன் பிடித்ததாக கர்நாடக போலீசாரால் சிறைபிடிக்கப்பட்டு மங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மீனவர்களின் குடும்பத்தினர் கர்நாடக சிறையில் வாடும் மீனவர்களை மீட்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விடுத்த கோரிக்கையையடுத்து மாநில மீனவர் கூட்டுறவு சங்கதலைவர் சேவியர்மனோகரன், கன்னியாகுமரி தூய அலங்காரமாதா திருத்தல அதிபர் அல்காந்தர், கன்னியாகுமரி ஊர் தலைவர் மைக்கேல், விசைபடகு சங்கதலைவர் சந்தியாகுராயப்பன், மாவட்ட கூட்டுறவு சங்க இயக்குனர் ஏரோணிமூஸ் ஆகியோர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்து, மீனவர்களை மீட்க உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.