யாஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழந்தது - இந்திய வானிலை மையம் தகவல்
Views - 244 Likes - 0 Liked
-
வங்க கடலில் சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது. ‘யாஸ்’ என்று பெயரிடப்பட்ட அந்த புயல், மிக தீவிர புயலாக நேற்று முன்தினம் உருவெடுத்தது. வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது.இந்த நிலையில், நேற்று காலை 9.15 மணிக்கு ஒடிசா மாநிலம் பாத்ரக் மாவட்டம் தாம்ரா துறைமுகத்தின் வடபகுதியில் புயல் கரையை கடக்கத்தொடங்கியது. புயலின் கண் பகுதி கரையை கடந்தபோது, மணிக்கு 130 கி.மீ. முதல் 145 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது.கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. 2 மீட்டர் முதல் 3 மீட்டர் உயரத்துக்கு அலை எழும்பியது. அத்துடன் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. பாலசோர், பாத்ரக் ஆகிய மாவட்டங்களின் கடலோர கிராமங்களில் கடல் நீர் புகுந்தது. கனமழை காரணமாக, புதாபலாங் ஆற்றில் நீர்மட்டம் 21 மீட்டர் அளவுக்கு உயர்ந்தது. அதன் அபாய அளவு 27 மீட்டர் ஆகும்.எனவே, ஆற்றின் இரு கரையோரங்களிலும் வசிக்கும் மக்களை மயூர்பஞ்ச் மாவட்ட நிர்வாகம் அப்புறப்படுத்தியது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் வெளியேற்றப்பட்டனர். மொத்தம் 5 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, ஜஜ்பூர் ஆகிய மாவட்டங்களில் மின்ஒயர்கள் துண்டிக்கப்பட்டன. அதை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. கெனோஜர் மாவட்டத்தில் மரம் விழுந்து அமுக்கியதால் ஒருவர் பலியானார். பாலசோர் மாவட்டத்தில் மரம் விழுந்ததில் ஒருவர் காயமடைந்தார்.பகல் 1.30 மணியளவில் புயல் முற்றிலும் கரையை கடந்து முடிந்தது. யாஸ் புயல் கரையை கடந்தபோது, மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களான கிழக்கு மிட்னாப்பூர், தெற்கு 24 பர்கானாஸ் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன. கடலோர நகரான திகா முற்றிலும் தண்ணீரில் மூழ்கியது.கடலோர சொகுசு விடுதிகளில் தண்ணீர் புகுந்தது. அங்கிருந்த தென்னை மரங்களின் உயரத்துக்கு அலை எழும்பியது. கடலோரத்தில் இருந்த மண் குடிசைகள் அடித்துச் செல்லப்பட்டன.மேற்கு வங்காளத்தில், பலத்த மழை காரணமாக, பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கங்கையிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஹூக்ளி அருகே உள்ள சாகர் தீவு வெள்ளத்தில் மூழ்கியது. பல இடங்களில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள் அடித்துச் செல்லப்பட்டன.கொல்கத்தா விமான நிலையம் நேற்று இரவு 7.45 மணி வரை தற்காலிகமாக மூடப்பட்டது. விமானங்கள் புறப்படவோ, தரை இறங்கவோ அனுமதிக்கப்படவில்லை. இதுபோல், கிழக்கு ரெயில்வே நிர்வாகம், அனைத்து ரெயில்களையும் ரத்து செய்தது.ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய இரு மாநிலங்களிலும் மொத்தம் 113 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டன. கீழே விழுந்து கிடந்த மின்கம்பங்கள் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தி சாலை போக்குவரத்தை சீர்செய்து வருவதாக அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.நேற்று மாலைக்கு மேல் யாஸ், தீவிர புயலாக வலுவிழந்தது. இதுதொடர்பாக இந்திய வானிலை மையம் கூறுகையில், தீவிர புயலாக இருந்த யாஸ், தற்போது ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழந்துள்ளது. அது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தமாக மாறக்கூடும் என்று தெரிவித்தது. வலுவிழந்த ‘யாஸ்’ புயல், தற்போது ஜார்கண்ட் மாநிலத்தை கடந்து வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்பட்டுத்தப்பட்டுள்ளனர்.News