நாகர்கோவிலில் நகரசபை தலைவி–கவுன்சிலர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் 1–ந்தேதி சாலை மறியல் நடத்த முடிவு
Views - 257 Likes - 0 Liked
-
நாகர்கோவிலில் நகரசபை தலைவி–கவுன்சிலர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினார்கள். 1–ந்தேதி சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
நகரசபை
நாகர்கோவில் நகரசபை கூட்டம் கடந்த 26–ந்தேதி நடந்தது. அப்போது கூட்டத்தில், நாகர்கோவில் நகரசபை பகுதியில் நடைபெற உள்ள பணிகளுக்கு டெண்டர் விட்டபிறகும் அதிகாரிகள் வேலை உத்தரவு வழங்காமல் காலதாமதம் செய்து வருவதாகக் கூறியும், உடனடியாக வேலை உத்தரவு வழங்க வலியுறுத்தியும் நகரசபை தலைவி மீனாதேவ் மற்றும் தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
இரவு, பகலாக நடைபெற்று வரும் இந்த உள்ளிருப்பு போராட்டத்துக்கு எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், பிரின்ஸ் ஆகியோர் ஆதரவு அளித்துள்ளனர். மேலும் தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்
இந்த நிலையில் உள்ளிருப்பு போராட்டம் நேற்று 4–வது நாளாக தொடர்ந்து நடந்தது. அப்போது நகரசபை தலைவி மீனாதேவ், கவுன்சிலர்களும் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு நூதனமுறையில் போராட்டம் நடத்தினார்கள். இதுபற்றி நகரசபை தலைவி மீனாதேவ் கூறியதாவது:–
2016–2017–ம் ஆண்டுக்கு நாகர்கோவில் நகரசபை பகுதியில் ரூ.20 கோடிக்கு பணிகள் மேற்கொள்ள பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் முதற்கட்டமாக ரூ.8 கோடிக்கான பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் இந்த பணிகளை மேற்கொள்ளவிடாமல் அதிகாரிகள் தடுக்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே அடுத்த கட்ட நடவடிக்கையாக இன்று (நேற்று) வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இனியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டம்
அதைத்தொடர்ந்து நகரசபை அலுவலகத்தில் தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், தி.மு.க. நகர செயலாளர் மகேஷ், பா.ஜனதா நிர்வாகிகள் தேவ், ராஜன், ம.தி.மு.க. செயலாளர் வெற்றிவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் பேசும் போது கூறியதாவது:–
நாகர்கோவில் நகரசபையில் டெண்டர் விடப்பட்ட பணிகளுக்கு வேலைக்கான உத்தரவு வழங்க வலியுறுத்தி நகரசபை தலைவி மீனாதேவ் மற்றும் கவுன்சிலர்கள் ஆகியோர் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டும் மாவட்ட கலெக்டரோ அல்லது நகரசபை கமிஷனரோ இதுதொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை.
சாலை மறியல்
நாங்கள் இன்னும் 2 நாட்கள் பொறுத்து இருப்போம். அதற்குள் பணிகளுக்கு வேலை உத்தரவு வழங்க வேண்டும். இல்லை என்றால் அனைத்து கட்சி நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து நகரசபை அலுவலகத்துக்கு முன் உள்ள பாலமோர் ரோட்டில் வருகிற 1–ந்தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.News