நாகர்கோவிலில் தேங்காய்களை ரோட்டில் உடைத்து தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம் விலை நிர்ணயம் செய்யக்கோரிக்கை
Views - 205 Likes - 0 Liked
-
தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்யக்கோரி நாகர்கோவிலில், தேங்காய்களை ரோட்டில் உடைத்து தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
உரித்த தேங்காய்களுக்கு குறைந்தபட்சம் கிலோ ஒன்றுக்கு ரூ.28 விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும், பாமாயில் இறக்குமதியை தடை செய்ய வேண்டும், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும், சத்துணவு கூடங்கள் மற்றும் அம்மா உணவகங்களில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும், கொப்பரை தேங்காய் இறக்குமதியை தடைசெய்து தேங்காய் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னை உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்புகளின் ஒருங்கிணைப்புகுழு சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு தென்னை உற்பத்தியாளர்கள் சங்கங்களின் போராட்ட குழுதலைவர் பத்மதாஸ் தலைமை தாங்கினார். மோகன்லால் பாபு, சக்திவேல் முருகன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமரி மாவட்ட நீர்வள ஆதார அமைப்பு தலைவர் வின்ஸ்ஆன்றோ, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு (விடுதலை) கட்சியின் மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரோட்டில் தேங்காய் உடைப்பு
போராட்டத்தின் முடிவில் தென்னை விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்திருந்த தேங்காய்களை கலெக்டர் அலுவலகம் முன் உள்ள ரோட்டில் உடைத்து கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், தென்னை உற்பத்தியாளர் கூட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
முன்னதாக மனு அளிக்க செல்லும்போது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலானோர் கோஷமிட்டபடி கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கலெக்டரிடம் மனுகொடுக்க நிர்வாகிகள் 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்று கூறி தடுத்தனர்.
இதனால் தென்னை விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இச்சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு உருவானது.News