சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீற முடியாது; தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க முடிவு; முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு
Views - 229 Likes - 0 Liked
-
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீற முடியாது. தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின் முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
அனைத்துக்கட்சி கூட்டம்
தமிழகத்திற்கு காவிரியில் 10 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதை கண்டித்து கர்நாடகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில் தண்ணீர் திறந்து விடும்படி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவு தொடர்பாக விவாதிக்க முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள மாநாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
வக்கீல்கள் விளக்கினர்
இதில் மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை மந்திரி அனந்தகுமார், மாநில நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல், சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா, வருவாய்த்துறை மந்திரி காகோடு திம்மப்பா, கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மந்திரி எச்.கே.பட்டீல், தலைமை செயலாளர் அரவிந்த் ஜாதவ், எதிர்க்கட்சி தலைவர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், ஈசுவரப்பா, பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா, வீரப்பமொய்லி எம்.பி., கே.எச். முனியப்பா எம்.பி., மண்டியா முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ரம்யா, எம்.பி.க்கள் மற்றும் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகும் வக்கீல்கள்(நாரிமன் தவிர) கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த வேண்டியதின் அவசியம் குறித்து வக்கீல்கள் விவரமாக எடுத்துக் கூறினர். தண்ணீரை திறக்காவிட்டால் உண்டாகும் சட்ட சிக்கல்கள் குறித்தும், தண்ணீரை திறந்துவிட்டால் அது அடுத்தகட்ட சட்ட போராட்டத்திற்கு சாதகமாக இருக்கும் என்றும் அவர்கள் விவரமாக விளக்கினர். இந்த கூட்டம் முடிந்த பிறகு முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடிவு
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கர்நாடக விவசாயிகளுக்கும் தண்ணீர் திறக்கப்படும். மேலும், பொதுமக்களுக்கு தேவையான குடிநீரும் வழங்கப்படும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை நாங்கள் மீற முடியாது. அந்த உத்தரவை பின்பற்றியே ஆக வேண்டும். அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள் கூறிய ஆலோசனைப்படி உடனடியாக காவிரி மேற்பார்வை குழுவை அணுகவும் தீர்மானித்து உள்ளோம்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.News