குமரி மாவட்ட விவசாயிகள் மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் வாங்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
Views - 232 Likes - 0 Liked
-
குமரி மாவட்ட விவசாயிகள் மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் வாங்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–
50 சதவீதம் வரை...
வேளாண்மையை எந்திரமயமாக்கும் திட்டத்தின்கீழ் பல்வேறு வேளாண் எந்திரங்களை விவசாயிகள் வாங்க நடப்பாண்டில் ரூ.31 கோடியே 6 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டமன்ற பேரவை விதி 110–ன்கீழ் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் நாற்று நடவு எந்திரம், பவர்டில்லர், சுழற்கலப்பை, குழி தோண்டும் கருவி, விசை களையெடுக்கும் எந்திரம், பல்வகை பயிர் கதிரடிக்கும் எந்திரம், தட்டை வெட்டும் கருவி, விசை தெளிப்பான்கள், தென்னை மரம் ஏறும் கருவி, நேரடி நெல் விதைப்பு கருவி போன்ற கருவிகளும் மற்றும் டிராக்டர், பவர்டில்லர் ஆகியவற்றின் மூலம் இயக்கப்படும் இதர வேளாண்மை கருவிகளும், எந்திரங்களும் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
இத்திட்டத்தில், சிறு, குறு, ஆதி திராவிட பழங்குடி மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரையும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் வரையும் மானியம் வழங்கப்படும். விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் எந்திரங்கள் மற்றும் கருவிகளை வேளாண் பொறியியல் துறையால் ஒப்புதல் மற்றும் அங்கீகாரம் வழங்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மானிய உதவியுடன் வாங்கி பயனடையலாம்.
விண்ணப்பங்கள்
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அதனுடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2, ஆதார் அட்டை நகல், சிட்டா அடங்கல் நகல், புல வரைபட நகல், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று, சாதிச்சான்று, டிராக்டரில் இயங்கக்கூடிய கருவிகளாக இருப்பின் டிராக்டரின் பதிவுச்சான்றின் நகல் ஆகிய ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
News