மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை: பொது நுழைவுத்தேர்வுக்கு எதிராக தமிழக மாணவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு மத்திய அரசுக்கு நோட்டீசு
Views - 208 Likes - 0 Liked
-
மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழக மாணவர் தாக்கல் செய்த மனு தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு கோரி இந்திய மருத்துவ கவுன்சில், மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
பொது நுழைவுத்தேர்வுக்கு எதிர்ப்பு
மருத்துவ படிப்புக்கு அடுத்த கல்வி ஆண்டு முதல் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (‘நீட்’) என்ற பொது நுழைவுத்தேர்வை நடத்தி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவதால், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதேபோல் மேலும் சில மாநில அரசுகளும் பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கையை நடத்த எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றன.
இந்த நிலையில் பொது நுழைவுத்தேர்வுக்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த ஈ.சுரேஷ் என்ற மாணவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
முறையற்றது
மனுதாரர் பிளஸ்–2 தேர்வில் 1,117 மதிப்பெண், அதாவது 92 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 96 சதவீத மதிப்பெண் பெற்று உள்ளார். மாநில கல்வி வாரிய மதிப்பெண் அடிப்படையில் இவர் எம்.பி.பி.எஸ். மருத்துவ கல்வி சேர்க்கைக்கு தகுதி பெற்றவர் ஆகிறார்.
ஆனால் இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ள பொது நுழைவுத்தேர்வு சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் அடிப்படையில் ஆனது. மாநில கல்வி வாரிய பாட திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. நிறுவனம் நடத்தும் தேர்வு முறையில் போதிய பயிற்சி கிடையாது. மேலும் தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளன. எனவே, மாநில கல்வி வாரிய பாட திட்டத்தில் பயின்ற மாணவர்களை சி.பி.எஸ்.இ. கல்வி பாட திட்டத்தில் பயின்ற மாணவர்களுடன் போட்டியில் ஈடுபடுத்துவது முறையற்றது.
தடை விதிக்க கோரிக்கை
இது மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமையை கேள்விக்கு உள்ளாக்குகிறது. மேலும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே தேர்வு நடத்த சி.பி.எஸ்.இ. நிறுவனத்தை அனுமதிப்பது அரசியல் சட்டத்தை மீறும் வகையில் அமைந்து உள்ளது. எனவே, இந்திய மருத்துவ கவுன்சில் சி.பி.எஸ்.இ. நிறுவனம் மூலம் நடத்தும் மருத்துவ பொது நுழைவுத்தேர்வுக்கு தடை விதித்து, தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளபடி, மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
மத்திய அரசுக்கு நோட்டீசு
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனில் ஆர்.தவே, யு.யு.லலித், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் மகாலட்சுமி பவானி, பி.கருணாகரன் ஆகியோர் ஆஜராகி, ஏற்கனவே இந்த விவகாரத்தில் வேறு சில மனுக்களின் மீதான விசாரணை நிலுவையில் இருப்பதாகவும், அவற்றுடன் இந்த மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த மனுவை பொது நுழைவுத்தேர்வு தொடர்பான மற்ற மனுக்களுடன் இணைக்கவும், 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு கோரி இந்திய மருத்துவ கவுன்சில், மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்பவும் உத்தரவிட்டனர்.
News