குமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்
Views - 220 Likes - 0 Liked
-
குமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியது.
மகாபலி மன்னன்
கேரளாவை ஆட்சி செய்து வந்த மகாபலி மன்னனிடம் மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து சென்று மூன்று அடி நிலம் கேட்டார். மன்னன் மகா விஷ்ணுவிடம் தனது விருப்பம் படி நிலத்தை அளந்து எடுக்குமாறு கூறினார். உடனே, மகா விஷ்ணு வானத்தையும், பூமியையும் 2 அடியில் அளந்துவிட்டு 3–வது அடிக்கு நிலம் கேட்டார். அப்போது, மகாபலி மன்னன் தனது தலையை காட்டி கொடுத்தார். அவரது தலையில் மகாவிஷ்ணு கால் வைத்ததும் மகாபலி மண்ணில் புதையுண்டார். அப்போது, ஆண்டுக்கு ஒருமுறை தான் ஆட்சி செய்த மக்களை காண வரும் வரத்தை மகாவிஷ்ணுவிடம் கேட்டு பெற்றுக்கொண்டார்.
ஓணம் கொண்டாட்டம்
இதையடுத்து தங்களை காணவரும் மகாபலியை வரவேற்கும் விதமாக கேரள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். இதையொட்டி கேரள மாநிலமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வீடு மற்றும் அலுவலகங்கள், நிறுவனங்களில் வண்ண மலர்களால் அத்தப்பூ கோடமிட்டுள்ளனர். பொதுமக்கள் வீடுகளில் ஓண ஊஞ்சலாடி ஓண விருந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
கேரள மாநிலத்தின் அருகில் குமரி மாவட்டத்திலும் நேற்று ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஓணத்தையொட்டி நேற்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. பொதுமக்கள் புதிய ஆடைகள் அணிந்து கேரள பாரம்பரிய முறைப்படி உணவு சமைத்து விருந்தினர்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர். மேலும், பல்வேறு இடங்களில் அத்தப்பூ கோலப்போட்டி, விளையாட்டு போட்டி போன்றவை நடைபெற்றன.
மகாபலி ஊர்வலம்
மார்த்தாண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஓணம் பண்டிகை களை கட்டியது. அருமனை மாறப்பாடி வாலிபர் சங்கம் சார்பில் ஓணம் பண்டிகை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு இளைஞர்கள் மகாபலி மன்னர் வேடமணிந்து மேளதாளத்துடன் தெருக்களில் ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஊர்வலம் அருமனை மேலத்தெருவில் இருந்து தொடங்கி அன்னை நகர், மணலி, முரம்புவிளை, குழிச்சல், மாறப்பாடி போன்ற பகுதிகளை சுற்றி வந்தது.
இதுபோல், குலசேகரம், திருவட்டார், களியக்காவிளை, கருங்கல், தக்கலை, நாகர்கோவில் போன்ற பல்வேறு பகுதிகளில் ஆட்டம் பாட்டத்துடன் ஓணம் கொண்டாடப்பட்டது.News