நாகர்கோவில் நகராட்சி குப்பைக்கிடங்கில் 2–வது நாளாக தொடர்ந்து எரியும் தீ
Views - 215 Likes - 0 Liked
-
நாகர்கோவில் நகராட்சி குப்பைக்கிடங்கில் 2–வது நாளாக தொடர்ந்து எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர்.
நகராட்சி குப்பைக்கிடங்கு
நாகர்கோவில் நகராட்சி 52 வார்டு பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் பீச்ரோடு சந்திப்பு அருகில் அமைந்துள்ள வலம்புரிவிளை குப்பைக்கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டு வருகின்றன. பல ஆண்டு காலமாக இங்கு குப்பைகள் சேமிக்கப்பட்டு வருவதால், மலைகள் மற்றும் மலை முகடுகளைப் போன்று குப்பைகள் மேடுகள் காட்சி தருகின்றன. இந்த குப்பைக்கிடங்கில் அடிக்கடி தீப்பற்றி எரிவதும், அதனை தீயணைப்பு படையினர் நாள்கணக்கில் போராடி அணைப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.
தீப்பற்றி எரியும்போது எழும் புகைமண்டலம் மற்றும் குப்பைக்கிடங்கில் இருந்து வரும் துர்நாற்றம் ஆகியவை குப்பைக்கிடங்கை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கி வருகிறது. அதே போல் கடந்த சில தினங்களுக்கு முன் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீயை நாகர்கோவில் தீயணைப்பு படையினர் 5 நாட்கள் போராடி முழுமையாக அணைத்தனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மதியம் மீண்டும் குப்பை கிடங்கில் தீப்பற்றி எரியத்தொடங்கியது. இதுபற்றிய தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மதியம் 12.30 மணியில் இருந்து இரவு 7 மணி வரை தொடர்ந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 6½ மணி நேரம் போராடியும் தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை.
2–வது நாளாக எரியும் தீ
நேற்று 2–வது நாளாக குப்பை கிடங்கில் தொடர்ந்து தீ எரிந்து கொண்டு இருக்கிறது. காலை 9 மணியில் இருந்து தீயணைக்கும்பணி தொடங்கியது. நாகர்கோவில் தீயணைப்பு நிலைய அதிகாரி சத்தியகுமார், குளச்சல் தீயணைப்பு நிலைய அதிகாரி அண்ணாத்துரை ஆகியோர் மேற்பார்வையில் தீயணைப்பு வீரர்கள் 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைக்கும் பணியை மேற்கொண்டனர்.
மேலும் குப்பைக்கிடங்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 1½ லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் இருந்து தீயணைப்பு படையினரின் அதிநவீன பம்ப் மூலமும் தீயணைப்பு பணி நடந்தது. மேலும் பொக்லைன் எந்திரங்கள், புல்டோசர் எந்திரங்களும் இந்த தீயணைப்பு பணியின்போது பயன்படுத்தப்பட்டன.
நெல்லையில் இருந்து...
இந்த தீயணைப்பு பணியை குமரி மாவட்ட தீயணைப்பு அதிகாரி (பொறுப்பு) சரவணபாபு வந்து பார்வையிட்டார். இன்னும் விரைவாக இந்த பணியை மேற்கொள்ள அவர் நெல்லையில் இருந்து மேலும் ஒரு தீயணைக்கும் பம்ப்பை நாகர்கோவிலுக்கு கொண்டுவர ஏற்பாடுகளை மேற்கொண்டார். அந்த பம்ப்பும் தீயணைப்பு பணியில் பயன்படுத்தப்பட உள்ளது.
நேற்று வெயிலும், காற்றின் வேகமும் அதிகமாக இருந்ததால் குப்பையில் தீ பரவும் வேகமும் அதிகமாக இருந்தது. இதனால் தீயணைப்பு படையினரால் தீயை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் நேற்று இரவு வரை தீயணைப்பு படையினர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் பணி முழுமையடையவில்லை. எனவே இன்றும் (வியாழக்கிழமை) தீயணைப்பு பணி மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.News