சுற்றுலா தினத்தையொட்டி குமரியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சங்கு மாலை அணிவித்து வரவேற்பு
Views - 240 Likes - 0 Liked
-
உலக சுற்றுலா தினத்தையொட்டி கன்னியாகுமரிக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சங்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
பயணிகளுக்கு வரவேற்பு
உலக சுற்றுலாதினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கன்னியாகுமரிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வரவேற்பு அளிக்க சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி கன்னியாகுமரிக்கு நேற்று ரஷிய நாட்டை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஒரு குழுவாக வந்திருந்தனர்.
படகுத்துறையில் வைத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தமிழக அரசு சுற்றுலாத்துறை அதிகாரி நெல்சன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வெளிநாட்டை சேர்ந்த அவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி நெற்றியில் சந்தனம், குங்குமம் திலகமிடப்பட்டது. பின்னர் சங்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து சுற்றுலா வழிகாட்டி புத்தகம் அவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உதவி சுற்றுலாத்துறை அதிகாரிகள் முத்துச்சாமி, செல்வ ராஜேந்திரன், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக உதவி மேலாளர் (தொழில்நுட்பம்) ஜோசப் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கம்
இதேபோல் கன்னியாகுமரி அரசு கலைக்கல்லூரியில் அனைவருக்கும் சுற்றுலா உலகளாவிய முறையில் மேம்படுத்துதல் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
மேலும் சுற்றுலா தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டியும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.News