இரணியல் அருகே டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி சாலை மறியல் 120 பெண்கள் உள்பட 132 பேர் கைது
Views - 194 Likes - 0 Liked
-
இரணியல் அருகே நுள்ளிவிளை, பேயன்குழியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 120 பெண்கள் உள்பட 132 பேரை போலீசார் கைது செய்தனர்.
டாஸ்மாக் கடை
குமரி மாவட்டம் இரணியல் அருகே நுள்ளிவிளை, பேயன்குழியில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த பகுதியில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவை அமைந்துள்ளன. எனவே, இந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இது தொடர்பாக நுள்ளிவிளை, பேயன்குழி, காரங்காடு, மாடத்தட்டுவிளை போன்ற பகுதிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தின் ஒரு கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், சட்டசபை தேர்தல் முடிந்தவுடன் கடைகள் அகற்றப்படும் என கூறியதாகவும், ஆனால், இதுவரை கடைகள் அகற்றப்படவில்லை எனவும் பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள்.
மறியல்
இந்தநிலையில், 2 டாஸ்மாக் கடைகளையும் அகற்றக்கோரி நேற்று முற்றுகை போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி நேற்று காலை 9 மணி முதல் குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கட்ராமன் தலைமையில் டாஸ்மாக் கடைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பகல் 12 மணியளவில் அந்த பகுதியில் ஏராளமான பெண்கள், பள்ளி குழந்தைகள் குவிந்தனர். அவர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து 2 டாஸ்மாக் கடைகளை திறக்க விடாமல் முற்றுகையிட்டனர். அப்போது, அங்கு நின்ற போலீசார் பொதுமக்களிடம் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
உடனே, அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் நுள்ளிவிளைக்கும், பேயன்குழிக்கும் இடைப்பட்ட பகுதியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், திங்கள்சந்தை–நாகர்கோவில் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் காரங்காடு பங்குதந்தை ஜெனிபர் எடிசன், அருட்பணியாளர் பபியான்ஸ், வக்கீல் பால்ராஜ், ராஜபூபதி, டேவிட்ராஜ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
கைது
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 120 பெண்கள் உள்பட 132 பேரை கைது செய்து திங்கள்சந்தை அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.News