குமரி மாவட்டத்தில் திடீர் மழை: பெருஞ்சாணி அணைப்பகுதியில் 61.2 மி.மீ. பதிவு
Views - 199 Likes - 0 Liked
-
குமரி மாவட்டத்தில் திடீர் மழை பெய்தது. பெருஞ்சாணி அணைப்பகுதியில் மட்டும் 61.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
திடீர் மழை
குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய வேண்டிய இந்த நேரத்தில் கோடை காலத்தைப்போன்று வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மேலும் மழை பெய்யாததால் அணைகளில் இருந்த தண்ணீரும் வெகுவாக குறைந்தது. இதனால் பாசனத்துக்கும், குடிதண்ணீருக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையேயும், விவசாயிகளிடையேயும் ஏற்பட்டது.
எனவே வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நாகர்கோவிலில் மதியம் வரை கடுமையான வெயில் காணப்பட்டது. மதியத்துக்குப்பிறகு மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அதைத்தொடர்ந்து திடீரென தூவானமாக லேசான தூறல் மழை பெய்தது. இரவில் லேசான தூறல் மழை இருந்தது.
மழை அளவு விவரம்
அதேநேரத்தில் மாவட்டத்தின் சில பகுதிகளில் சுமாரமான மழை பெய்தது. குமரி மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:–
பேச்சிப்பாறை– 11, பெருஞ்சாணி– 61.2, சிற்றார் 1– 18.2, சிற்றார் 2– 5.4, பொய்கை– 2.8, பூதப்பாண்டி– 23.5, சுருளோடு– 29, கன்னிமார்– 15.2, ஆரல்வாய்மொழி– 2.8, பாலமோர்– 10.4, மயிலாடி– 4.6, திருவட்டார்– 8.4, புத்தன் அணை– 60.4 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
தண்ணீர் வரத்து
இதையொட்டி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 403 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 643 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணணக்கு 92 கன அடி தண்ணீரும், சிற்றார்–1 அணைக்கு 6 கன அடி தண்ணீரும், சிற்றார்–2 அணைக்கு 13 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையைத்தவிர மற்ற அணைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
News