தமிழக மீனவர் பிரச்சினை: இந்தியா–இலங்கை மந்திரிகள் டெல்லியில் 5–ந் தேதி பேச்சுவார்த்தை
Views - 259 Likes - 0 Liked
-
தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக இந்தியா–இலங்கை மந்திரிகள் இடையே 5–ந் தேதி (சனிக்கிழமை) டெல்லியில் பேச்சுவார்த்தை நடக்கிறது.
மீனவர் பிரச்சினை
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி சிறை பிடிப்பதும், அவர்களது மீன்பிடி உபகரணங்களை பறித்து செல்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. மேலும் இரு நாட்டு மீனவர்களிடையே நடுக்கடலில் மோதல் ஏற்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
நீண்ட காலமாக தொடரும் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க இரு நாட்டு அரசுகளும் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் இரு நாட்டு மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை, மந்திரிகளிடையே பேச்சுவார்த்தை என தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை
இந்த பேச்சுவார்த்தையை தொடரும் நடவடிக்கையாக இலங்கை மீனவ பிரதிநிதிகள் குழு ஒன்று வருகிற 2–ந் தேதி (புதன்கிழமை) டெல்லி வருகிறது. அவர்கள் தமிழக மீனவர்கள் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் பங்கேற்பதற்காக தமிழக மீனவ பிரதிநிதிகள் டெல்லி செல்ல இருப்பதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து இரு நாட்டு மந்திரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை 5–ந் தேதி (சனிக்கிழமை) டெல்லியில் நடக்கிறது. இதில் இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீரா மற்றும் மீன்வளத்துறை மந்திரி மகிந்த அமரவீரா ஆகியோருடன் மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இலங்கை மீனவர்கள் போராட்டம்
இதற்கிடையே தமிழக மீனவர்களை வாரந்தோறும் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் தங்கள் கடல் எல்லையில் மீன்பிடிக்க அனுமதிக்கும் திட்டம் ஒன்றை இலங்கை அரசு பரிசீலித்து வருவதாக கூறி, இலங்கை மீனவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை இலங்கை அரசு மறுத்து உள்ளது.
News