டி.என்.பி.எஸ்.சி. குரூப்–4 தேர்வு: குமரி மாவட்டத்தில் 34,492 பேர் எழுதினார்கள்
Views - 217 Likes - 0 Liked
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்–4 தேர்வு குமரி மாவட்டத்தில் 34,492 பேர் எழுதினார்கள்.
குரூப்–4 தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் குரூப்–4 தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவர், வரைவாளர் ஆகிய பதவிகளுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வை எழுதுவதற்காக குமரி மாவட்டத்தில் 42,586 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
குரூப்–4 தேர்வு எழுதுவதற்காக நாகர்கோவிலில் எஸ்.எல்.பி. அரசு பள்ளி, டதி பள்ளி, லிட்டில்பிளவர் பள்ளி, அல்போன்சா பள்ளி ஆகிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்பட மொத்தம் 33 தேர்வு மையங்களும், கன்னியாகுமரியில் 5 தேர்வு மையங்களும், குழித்துறையில் 30 தேர்வு மையங்களும், தக்கலையில் 15 தேர்வு மையங்களும், தோவாளையில் 2 தேர்வு மையங்களும் என மொத்தம் 85 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
34,492 பேர்
தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 42,586 பேரில் 34,492 பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள். இவர்களில் 52 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவர். 8,094 பேர் தேர்வு எழுத வரவில்லை. நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு தேர்வு எழுதுவதற்காக செய்யப்பட்டிருந்த அடிப்படை வசதிகள் பற்றி அவர் கேட்டறிந்தார்.
தேர்வு எழுதுவதற்காக சில பெண்கள் கைக்குழந்தையுடன் வந்திருந்தனர். அவர்கள் தேர்வு மையத்துக்கு செல்லும்போது குழந்தையை கணவரிடம் கொடுத்து விட்டுச் சென்றனர். தேர்வு மையத்துக்குள் கால்குலேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
வீடியோ பதிவு
டி.என்.பி.எஸ்.சி. குரூப்–4 தேர்வை எவ்வித பிரச்சினையுமின்றி சிறப்பாக நடத்தி முடிப்பதற்காக 17 நடமாடும் (மொபைல்) கண்காணிப்புக் குழுக்களும், துணை கலெக்டர் அந்தஸ்திலான அதிகாரிகள் தலைமையிலான 10 பறக்கும் படையும் அமைக்கப்பட்டிருந்து. குறிப்பிட்ட மையங்களில் வீடியோ பதிவு மூலம் கண்காணிக்கப்பட்டது.News