குமரி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் பணிகள் பாதிப்பு
Views - 365 Likes - 0 Liked
-
குமரி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டம்
500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனாலும் இந்த பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிகள், தபால் நிலையங்களில் வாங்கப்பட்டு மாற்றி கொடுக்கப்படுகின்றன. டெபாசிட்டாகவும் பெறப்படுகின்றன. அதேநேரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களில் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் வாங்க அனுமதி அளிக்கப்படவில்லை.
இதனால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் விவசாயிகள் நகைக்கடன் பெறவும், அடமானம் வைத்த நகைகளை மீட்கவோ முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் உரம், பூச்சி மருந்து, விதை விற்பனை பாதிக்கப்பட்டது. எனவே செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை பிற வங்கிகளைப்போல கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களில் வாங்க அனுமதிக்க வேண்டும் அல்லது கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு தேவையான நிதி வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் குமரி மாவட்டக்கிளை சார்பில் நேற்று முன்தினம் பணிகளை புறக்கணித்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
காலவரையற்ற வேலைநிறுத்தம்
இந்தநிலையில் நேற்று முன்தினம் திண்டுக்கல்லில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இதர வங்கிகளைப் போன்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும், இந்த பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 15-ந் தேதி (நேற்று) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று குமரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தாங்கள் பணிபுரியும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் குதித்தனர். இதனால் மாவட்டத்தில் ஏராளமான கூட்டுறவு கடன் சங்கங்கள் பூட்டப்பட்டு இருந்தன. இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன.
விளக்க கூட்டம்
இந்த வேலைநிறுத்தம் தொடர்பான விளக்க கூட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்க மாவட்ட செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். தலைவர் சகாய திலக்ராஜ் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் விக்டர்தாஸ், முருகன், கிருஷ்ணன், கிறிஸ்டோபர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களைச் சேர்ந்த ஆண், பெண் செயலாளர்கள், பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
100 சங்கங்கள் அடைப்பு
இதுதொடர்பாக மாவட்ட செயலாளர் முருகானந்தம் கூறும்போது, “கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு போதிய நிதி வசதி ஏற்படுத்தி தரவேண்டும், பிற வங்கிகளைப்போல கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் எங்களது சங்கம் சார்பில் 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறோம்.
இந்த போராட்டத்தில் கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள், பணியாளர்கள் என 350-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். மொத்தம் உள்ள 115 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், 2-வது நாளான நேற்று நாகர்கோவில் பெருவிளை, மறவன்குடியிருப்பு, புத்தேரி, மேலகிருஷ்ணன்புதூர், ஈத்தாமொழி, ஆரல்வாய்மொழி, குருந்தங்கோடு, ஐரேனிபுரம், வெண்டலிகோடு, மாவிளை, மணவிளை, குலசேகரம், மணக்காவிளை, காட்டாத்துறை, திருவட்டார் உள்பட 100 கூட்டுறவு கடன் சங்கங்கள் அடைக்கப்பட்டுள்ளன“ என்றார்.News