சபரிமலை மலையேற்ற பாதையில் உடல்நலம் பாதிக்கப்படும் பக்தர்களை கொண்டு வர வாகனம் அறிமுகம் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் தொடங்கி வைத்தார்
Views - 200 Likes - 0 Liked
-
சபரிமலை மலையேற்ற பாதையில் உடல்நலம் பாதிக்கப்படும் அய்யப்ப பக்தர்களை சிகிச்சைக்கு கொண்டு வர புதிய வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதனை திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரையார் கோபாலகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார்.
நடைதிறப்பு
நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 15–ந் தேதி திறக்கப்பட்டது. 16–ந் தேதி முதல் நெய்யபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகள் நடந்து வருகின்றன.
கேரளா மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அய்யப்ப பக்தர்களின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் மருத்துவம், சுகாதாரம் உள்பட அத்தியாவசிய சேவைகள், பம்பை, சன்னிதானம் மற்றும் மலையேற்ற பகுதிகளில் நடந்து வருகிறது.
வாகனம் அறிமுகம்
பம்பையில் இருந்து சன்னிதானம் வரையிலான மலையேற்ற பகுதிகளில், உடல் நலம் பாதிக்கப்படும் பக்தர்களுக்கு உடனடி மேல் சிகிச்சை அளிக்க வசதியாக, அவர்களை கொண்டு வர திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் புதிய வாகனம் அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளது. சென்னையை சேர்ந்த அய்யப்ப பக்தர்களான கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிவா ஆகியோர் நன்கொடையாக வழங்கிய, அந்த வாகனத்தை திருவிதாங்கூர் தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி பம்பையில் நடைபெற்றது.
அந்த வாகனத்தின் சாவியை திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரையார் கோபால கிருஷ்ணன் நன்கொடையாளர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
புதிய வாகனத்தை அறிமுகம் செய்து வைத்து பிரையார் கோபால கிருஷ்ணன் கூறியதாவது:–
முந்தைய காலங்களில் மலையேற்ற பாதைகளில் உடல் நலம் பாதிக்கப்படும் பக்தர்கள் படுக்கை டோலிகளில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சுமந்து வருவார்கள். இதன் காரணமாக காலதாமதம் ஏற்பட்டு, சரியான நேரத்தில் தகுந்த சிகிச்சை அளிக்க முடியாத நிலை இருந்து வந்தது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள வாகனம் மூலம் பாதிக்கப்பட்ட அய்யப்ப பக்தர்கள் 10 நிமிடங்களில் முதலுதவி சிகிச்சைக்கு பம்பை கொண்டு வரப்படுவார்கள். மருத்துவ அதிகாரிகள் சிபாரிசு செய்யப்படும் நோயாளிகள் மட்டுமே இந்த வாகனத்தில் கொண்டு வர அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.News