குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கும் பணி தீவிரம் பிரமாண்டமான கிறிஸ்துமஸ் தாத்தா உருவப்பொம்மைகளும் அமைப்பு
Views - 293 Likes - 0 Liked
-
குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கும் பணி தீவிரமடைந்து வருகிறது. பிரமாண்டமான கிறிஸ்துமஸ் தாத்தா உருவப் பொம்மைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.
கிறிஸ்துமஸ் பண்டிகை
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் போற்றி வணங்கப்படும் இயேசு கிறிஸ்து, இவ்வுலகில் மனுஉருவாய் தோன்றிய நாளே கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25–ந் தேதி இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25–ந் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இன்னும் ஒருசில தினங்களே உள்ள நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்ட ஏற்பாடுகள் குமரி மாவட்டம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. பெரும்பாலான கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் வீடுகளில், ஸ்டார்கள் மற்றும் மின்விளக்குகளால் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சில கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் கிறிஸ்தவ வீடுகளில் மின்விளக்கு அலங்காரம் மற்றும் ஸ்டார் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
குடில் அமைப்பு தீவிரம்
இதேபோல் இயேசு கிறிஸ்து இந்த உலகில் எளிமையாக பிறந்ததை நினைவுகூறும் விதமாக கிறிஸ்தவ ஆலயங்கள், கிறிஸ்தவர்களின் வீடுகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் பொதுஇடங்களிலும் குடில்கள் அமைக்கும் பணி தீவிரம் அடைந்து வருகிறது.
கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த ஆலயங்களில் குடில்கள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. இந்த பணிகள் அதிகபட்சமாக வருகிற 24–ந் தேதிக்கு முன்னதாக நிறைவு பெறும். இதேபோல் பல வீடுகளில் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல வீடுகளில் குடில்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வீட்டில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை இணைந்து குடில்கள் அமைத்து வருகிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் விதம்– விதமான குடில்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
குடில்களும், அவற்றில் அமைக்கப்படும் பலவண்ண மின் விளக்குகளின் அலங்காரமும் சிறுவர்– சிறுமிகளை உற்சாகப்படுத்துகின்றன.
கிறிஸ்துமஸ் தாத்தா
இதுஒருபுறமிருக்க சிறுவர்– சிறுமிகள் புடைசூழ, ‘சான்டா கிளாஸ்` என்று சொல்லக்கூடிய கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவருடன் இசைக்கருவிகளை மீட்டியவாறு இயேசு பிறப்பு பாடல்களை பாடியபடி கிறிஸ்துமஸ் கீதபவனியும் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
பிரமாண்டமான கிறிஸ்துமஸ் தாத்தா உருவப்பொம்மைகள் அமைக்கும் பணியும் குமரி மாவட்டத்தில் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. வணிக நிறுவனங்கள் முதல் பல்வேறு அமைப்புகள் சார்பில் உருவப்பொம்மைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. நாகர்கோவில் அருகே சுங்கான்கடை பகுதியிலும் பிரமாண்டமான கிறிஸ்துமஸ் தாத்தா உருவப்பொம்மை அமைக்கப்பட்டுள்ளது. இதை அவ்வழியாக வந்து செல்வோர் ஆச்சரியத்துடன் பார்த்தபடி செல்கின்றனர்.
News