ஆதார் அட்டையை பயன்படுத்தி கை பெருவிரல் ரேகை மூலம் பண பரிமாற்றம் செய்யும் முறை 2 வாரங்களில் தொடங்க இருப்பதாக பிரதமர் மோடி அறிவிப்பு
Views - 249 Likes - 0 Liked
-
ஆதார் அட்டையை பயன்படுத்தி, கை பெருவிரல் ரேகை மூலம் பண பரிமாற்றம் செய்யும் முறை இன்னும் 2 வாரங்களில் தொடங்க இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.
மின்னணு பண பரிமாற்றம்
நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8–ந்தேதி இரவு அதிரடியாக அறிவித்தார்.
அந்த ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இனி பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வைத்து இருந்தால் அவற்றை ரிசர்வ் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் பிரமாண பத்திரம் கொடுத்துத்தான் மாற்றிக் கொள்ளவேண்டும்.
நாட்டில் ரொக்கமில்லா பண பறிமாற்றத்தை, அதாவது மின்னணு பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
புதிய செல்போன் செயலி
இந்த நிலையில், டெல்லியில் உள்ள தல்கதோரா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற ‘டிகிதன்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, மின்னணு பண பரிமாற்றத்துக்கான ‘பீம்’ (‘பாரத் இன்டர்பேஸ் பார் மணி’) என்ற புதிய செயலியை தொடங்கிவைத்தார். செல்போன் மூலம் பணம் செலுத்த உதவும் இந்த செயலிக்கு, அரசியல் சட்டத்தை உருவாக்கிய பீமராவ் அம்பேத்கரின் நினைவாக ‘பீம்’ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த முறையில் பொருட்கள் வாங்குவதற்கு இணையதள வசதியுடன் கூடிய தொலைபேசி இணைப்பு தேவை இல்லை.
ஆனால் வியாபாரிகள் ரொக்கமில்லா ஆதார் வணிக செயலியை தங்கள் ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து, அந்த ஸ்மார்ட் போனை கைவிரல் ரேகை பதிவு கருவியுடன் இணைக்கவேண்டும். வாடிக்கையாளர் தனது ஆதார் அடையாள அட்டை எண்ணை இந்த செயலியுடன் இணைப்பதோடு, எந்த வங்கியில் உள்ள கணக்கின் மூலம் பணம் செலுத்தப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும்.
கை பெருவிரல் ரேகை
இந்த முறையில் பொருட்கள் வாங்கி வங்கி கணக்கின் மூலம் பணம் செலுத்துவதற்கு வாடிக்கையாளரின் கை பெருவிரல் ரேகைதான் கடவுச் சொல்லாக (‘பாஸ்வேர்டு’) ஆக பயன்படும். மாஸ்டர் கார்டு, விசா கார்டு போன்ற பண அட்டைகளை பயன்படுத்தி ‘பீம் செயலி’ உதவியுடன் பொருட்களை வாங்குவோர் அதற்கான சேவை கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியது இல்லை.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:–
நாட்டில் ரொக்கமில்லா பண பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. ரொக்கமில்லா பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் சமீபத்தில் நுகர்வோருக்கான லக்கி கிரகாக் யோஜனா (அதிர்ஷ்ட நுகர்வோர் திட்டம்), சிறு வணிகர்களுக்கான டிகிதன் வியாபார் யோஜனா (டிகி பணவர்த்தக திட்டம்) என்ற இரு பரிசு திட்டங்களை நான் அறிவித்தேன். நாட்டில் விரைவில் அனைத்து பணபரிமாற்றங்களும் ‘பீம் செயலி’யின் மூலமே நடைபெறும். இந்த பீம் செல்போன் செயலி தலித்துகளுக்கும், பழங்குடியின மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அதிகாரம் வழங்குவதாக அமையும்.
2 வாரங்களில்...
வாடிக்கையாளரின் கை பெருவிரல் ரேகை மூலம் பண பரிமாற்றம் நடைபெறுவதால் இது மிகவும் பாதுகாப்பான பண பரிமாற்ற முறை ஆகும். இது படிக்காத பாமர மக்களுக்கும் வசதியான பரிமாற்ற முறை. மக்களின் கை பெருவிரல் ரேகையே இனி அவர்களுடைய வங்கியாகவும், அடையாளமாகவும், வணிகமாகவும் செயல்படப் போகிறது. இந்த முறையில் பண பரிமாற்றம் செய்யும் முறை நாடு முழுவதும் இன்றும் 2 வாரங்களில் தொடங்க இருக்கிறது.
ரொக்கமற்ற பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொருவரும் தினசரி குறைந்தபட்சம் 5 மின்னணு பணபரிமாற்றத்தை மேற்கொள்ள வேண்டும்.
புதிய வாய்ப்புகள்
இந்தியாவின் மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்கு குறைவானவர்கள். அவர்கள் அனைவரும் மின்னணு பணபரிமாற்றத்துக்கு மாறிவிட்டால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றமாக அது அமையும்.
இந்தியாவில் தேர்தலில் மின்னணு எந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெறுவதை உலக நாடுகள் ஆச்சரியத்துடன் பார்க்கும் நிலையில், நாம் இப்போது மின்னணு பண பரிமாற்றம் என்ற புரட்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம்.
மிகப்பெரும் சக்தியான தொழில்நுட்பத்தின் மூலம் மிகவும் நலிவடைந்த மக்களும் அதிகாரம் வழங்கப்படுகிறது.
நம்பிக்கையுடன் புதிய வாய்ப்புகளை என்னால் உருவாக்க முடியும். மற்றவர்களைப் போல் நான் எதையும் அவநம்பிக்கையுடன் அணுகுவது இல்லை. பங்குச் சந்தையில் நீண்டகாலமாக மின்னணு முறையில் பணபரிமாற்றம் நடைபெறுகிறது. ஆனால் பல்வேறு மட்டங்களிலும் மின்னணு முறையை பயன்படுத்துவதில் இந்தியர்களுக்கு உள்ள திறமை குறித்து இன்னும் சிலர் கேள்வி எழுப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஊழல் பெருச்சாளிகள்
உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை ஒழித்த நடவடிக்கையை, மத்திய அரசு மலையை தோண்டி வெறும் பெருச்சாளிகளை மட்டும் பிடித்து இருப்பதாக சில அரசியல்வாதிகள் குறை கூறி உள்ளனர்.
அவர்கள் சொல்வதும் ஒருவகையில் சரிதான். மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கொள்ளையடித்த ஊழல் பெருச்சாளிகளை நாங்கள் பிடிக்க விரும்புகிறோம். அதற்கான நடவடிக்கையை தற்போது எடுத்து உள்ளோம். மின்னணு பணபரிமாற்றத்தை ஊக்குவிப்பதில் ஊடகங்களின் பங்களிப்பும் முக்கியமானதாக உள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
பரிசுத்தொகை
இந்த நிகழ்ச்சியில், மின்னணு பண பரிமாற்ற பரிசு திட்டத்தில் வெற்றி பெற்றோருக்கு பிரதமர் மோடி பரிசுத்தொகை வழங்கினார்.
News