பொங்கல் பண்டிகை ‘களை’ கட்டியது: கரும்பு, மஞ்சள்குலை விற்பனை மும்முரம்
Views - 294 Likes - 0 Liked
-
குமரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை ‘களை’ கட்ட தொடங்கி விட்டது. கரும்பு, மஞ்சள்குலை உள்ளிட்ட பொங்கல் பொருட்களின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகை
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் தை மாதம் 1-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை அறுவடை திருநாளாகவும், உழவர் திருநாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பருவமழை பொய்த்துப்போனதால் ஏற்பட்ட வறட்சியால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தாலும், தமிழகத்தில் பாரம்பரியமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாட பொதுமக்களும், விவசாயிகளும் தயாராகி வருகிறார்கள். சாதி, மத, இன பாகுபாடு இன்றி கொண்டாடப்படும் இந்த பொங்கல் பண்டிகையன்று விவசாயிகளும், பொதுமக்களும் அதிகாலையிலேயே எழுந்து நீராடி, புத்தாடை அணிந்து, வீட்டின் முற்றங்களில் வண்ண, வண்ண கோலமிட்டும், பின்னர் குடும்பமாய் சேர்ந்து பொங்கலோ பொங்கல் என்ற குலவை சத்தத்துடன் பொங்கலிட்டு தாங்கள் வணங்கும் தெய்வங்களுக்கு படைத்தும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். அதன்பிறகு வீடுகளில் அறுசுவை உணவுகள் தயாரித்து பரிமாறப்படும்.
மும்முரமாக விற்பனை
எனவே பொங்கல் பண்டிகை என்றாலே புத்தரிசி பொங்கல், தித்திக்கும் கரும்பு, பழ வகைகள், மஞ்சள் குலைகள், பனங்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு கிழங்கு வகைகள், காய்கறிகள், மண்பானைகள், பனை ஓலைகள் போன்றவை முக்கிய இடம் பெறும். எனவே பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களே ஒரு சில நாட்களுக்கு முன்பிருந்தே மக்கள் வாங்கி வைக்கத் தொடங்கி விடுவார்கள்.
இதேபோல் பொங்கலுக்கு இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில் தற்போது பொங்கல் பொருட்கள் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கிஉள்ளது. நாகர்கோவில் வடசேரி சந்தை, ஒழுகினசேரி பகுதியில் உள்ள தனியார் சந்தை மற்றும் நகரப்பகுதியில் உள்ள பெரிய, பெரிய காய்கறி கடைகள், நடைபாதைக் கடைகள் போன்றவற்றில் கரும்பு, மஞ்சள்குலை, பனங்கிழங்கு, பனை ஓலை கட்டுகள், பொங்கல் கிழங்கு வகைகள், பொங்கல் பானைகள் உள்ளிட்ட பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மக்கள் போட்டி, போட்டு வாங்கிச் செல்வதால் இவற்றின் விற்பனையும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ரூ.320-க்கு கரும்பு கட்டுகள்
நாகர்கோவில் வடசேரி பகுதியில் நடைபாதைகளில் விற்பனை செய்யப்படும் கரும்பு ஒன்று ரூ.40-க்கும், 25 கரும்புகள் கொண்ட கட்டு ஒன்று ரூ.400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
25 பனங்கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேநேரத்தில் சந்தைகளில் கரும்பு ஒன்று ரூ.30-க்கும், கட்டு ஒன்று ரூ.320-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பனங்கிழக்கு ஒன்று ரூ.2 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல் பொங்கல் பொருட்களான மஞ்சள்குலை ஒன்று ரூ.25-க்கும், ஒரு கிலோ கருணைக்கிழங்கு ரூ.40, குச்சி சேம்புக்கிழங்கு ரூ.40, பிடிகிழங்கு- ரூ.40, சிறுகிழங்கு- ரூ.56, சீனிகிழங்கு- ரூ.30, பால்சேம்புக்கிழங்கு- ரூ.50, கூவைக்கிழங்கு- ரூ.50, காச்சிக்கிழங்கு- ரூ.46, மிக்சர் கிழங்கு- ரூ.50 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
பொங்கல் வைக்க பயன்படுத்தும் மண்பானைகள், பொங்கல் வைக்க அடுப்பு எரிக்க பயன்படுத்தும் பனை ஓலை கட்டுகள், கோலப்பொடிகள் விற்பனை போன்றவையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பரவலாக பொங்கல் பொருட்களின் விற்பனை தீவிரமடைந்து வருகிறது.News