பள்ளி–கல்லூரிகளில் பொங்கல் கொண்டாட்டம் மாணவ–மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்பு
Views - 190 Likes - 0 Liked
-
தை திருநாளில் கொண்டாடப்படும் தைப் பொங்கல் விழா தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் பறைசாற்றும் விழாவாக அமைந்துள்ளது. இதனால் தான் பொங்கல் திருநாளை தமிழர் திருநாள் என்றும், உழவர் திருநாள் என்றும், இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விழா என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
தமிழர்களின் பண்பாடு, கலாசாரத்தில் ஊறிப்போன பொங்கல் விழா குறிப்பிட்டவர்களால் மட்டும் கொண்டாடப்படும் விழா அல்ல. சாதி, மத பாகுபாடு இன்றி, ஏழை–பணக்காரன் என்ற வேறுபாடுகளை களைந்து அனைவரும் கொண்டாடும் சமத்துவப் பொங்கலாக இருந்து வருகிறது.
பள்ளி–கல்லூரிகளில்...
இந்த விழா வருகிற 14–ந் தேதி கொண்டாடப்படுவதாக இருந்தாலும், குமரி மாவட்டத்தின் பள்ளி–கல்லூரிகளில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி தமிழர்களின் பாரம்பரியமான உடைகளுடன் மாணவ– மாணவிகளும், ஆசிரிய–ஆசிரியைகளும் பள்ளி, கல்லூரிகளில் வலம் வருவதை காண முடிகிறது.
மேலும் மாணவ–மாணவிகளுக்கு என தனித்தனி போட்டிகள், ஆசிரிய–ஆசிரியைகளுக்கான தனித்தனி போட்டிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து வண்ணக்கோலமிட்டு பொங்கலிடும் நிகழ்ச்சிகள், விழா இறுதியில் அனைவருக்கும் இனிப்பு வழங்குதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. சில பள்ளி–கல்லூரிகளில் பொங்கல் பண்டிகையின்போது கொண்டாடுவதைப்போன்று உறியடி போட்டி, கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளையும் நடத்துகிறார்கள்.
ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி
அந்த வகையில் நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் நேற்று பொங்கல் கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. அப்போது மாணவ–மாணவிகள், ஆசிரிய–ஆசிரியைகள் அனைவரும் பாரம்பரியமான உடைகள் அணிந்து வந்திருந்தனர். ஒரு சில மாணவிகள் மட்டுமே சுடிதார் அணிந்திருந்தனர்.
உறியடி போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடைபெற்றது. பின்னர் அனைவரும் சேர்ந்து பொங்கலிட்டு பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர்.News