பள்ளி மாணவர்களுக்கு தட்டம்மை தடுப்பூசி போட பெற்றோர் எதிர்ப்பு
Views - 277 Likes - 0 Liked
-
மத்திய அரசு சார்பில் பிறந்து 9 மாதம் ஆன குழந்தை முதல் 15 வயது வரையிலான சிறுவர்– சிறுமிகளுக்கு தட்டம்மை– ருபெல்லா தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது. இந்த ஊசி போடுவது தொடர்பான அறிவிப்பு வெளியானது முதல் இந்த ஊசிக்கு எதிரான புரளிகள் சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் அது உண்மையல்ல என்பது தொடர்பாகவும், ஊசி போடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மருத்துவ அதிகாரிகள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும் மக்கள் மத்தியில் இதுதொடர்பாக ஏற்பட்ட அச்சம் விலகவில்லை. மேலும் நேற்று முன்தினம் இந்த ஊசி போட்ட குழந்தைகள் பலருக்கு கையில் வீக்கமும், காய்ச்சலும் ஏற்பட்டதாக தகவல்கள் பரவின.
இதனால் குமரி மாவட்டத்தில் நேற்று பல பள்ளிகளில் படிக்கும் மாணவ– மாணவிகளுக்கு இந்த ஊசி போட வேண்டாம் என்று நேரடியாகவும், கடிதம் மூலமாகவும் தெரிவித்தனர். சில பள்ளிகளில் மாணவ– மாணவிகளின் பெற்றோர் நேரடியாக சென்று எதிர்ப்பு தெரிவித்தனர். நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று 50–க்கும் மேற்பட்ட பெற்றோர் திரண்டனர். அவர்கள் அந்த பள்ளியில் பயிலும் தங்களது குழந்தைகளுக்கு தட்டம்மை– ருபெல்லா தடுப்பூசி போட கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் பள்ளி வாயிலை மறித்து நின்றனர். அவர்களுடன் ஊசி போட வந்த மருத்துவக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் எந்த உடன்பாடும் ஏற்படாததை தொடர்ந்து மருத்துவக்குழுவினர் ஊசி போடும் பணியை கைவிட்டு அங்கிருந்து திரும்பிச்சென்றனர். இதனால் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.News