நொடிக்கு, நொடி அரசியல் மாற்றம்: தமிழகத்தில் 10 நாட்களாக பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வுகள்
Views - 186 Likes - 0 Liked
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதைத்தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக தமிழக அரசியல் களத்தில் நொடிக்கு, நொடி பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன.
அடுத்த முதல்–அமைச்சராக யார் வருவார்? என்ற எதிர்பார்ப்பும், சொத்துகுவிப்பு வழக்கின் திருப்பமும் தமிழக அரசியலை அனைவரும் உற்று நோக்க வைத்தது. 5–ந்தேதி தொடங்கி 16–ந்தேதி வரை நடந்த அரசியல் பரபரப்புகள் என்னென்ன என்பது கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
* 5–ந்தேதி: தமிழக முதல்–அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* 6–ந்தேதி: ஜெயலலிதாவுக்கு ஆஸ்பத்திரியில் அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து லண்டனில் இருந்து வந்த டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே விளக்கம் அளித்தார்.
* 7–ந்தேதி: முதல்–அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம் இரவு 9 மணியளவில் ஜெயலலிதா சமாதியில் 40 நிமிடங்கள் தியானம் செய்தார். தன்னை அ.தி.மு.க. தலைமை மிரட்டியது என்று கடும் விமர்சனத்தை முன்வைத்த ஓ.பன்னீர்செல்வம், தனது ராஜினாமாவை வாபஸ் பெறுவேன் என்று அறிவித்தார்.
8–ந்தேதி
*8–ந்தேதி: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு.
* அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வத்தை ஆதரிப்பாளர்களா அல்லது சசிகலா பக்கம் இருப்பார்களா என்ற நிலையில் சசிகலா ஆலோசனையின் பேரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 சொகுசு பஸ்களில் கூவத்தூர் விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
* சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட சண்முகநாதன் எம்.எல்.ஏ., சொகுசு பஸ்சில் இருந்து இறங்கி, ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்று ஆதரவு தெரிவித்தார். அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன், எம்.எல்.ஏ.க்கள் ஆறுகுட்டி, மாணிக்கம், மனோரஞ்சிதம், மனோகரன் ஆகியோர் ஆதரவு அளித்தனர். அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு. மெஜாரிட்டியை நிரூபித்து காட்டுவேன் என்று பன்னீர்செல்வம் அறிவிப்பு.
9–ந்தேதி
* மும்பையில் இருந்து தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னை வருகை. கவர்னருடன் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தனித்தனியாக சந்திப்பு.
* முதல்–அமைச்சராக சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக்கோரி பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் கடும் அமளி.
* ஆதரவாளர்களுடன் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஆலோசனை.
* கூவத்தூரில் உள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை விடுவிக்கக்கோரி ஆட்கொணர்வு மனு ஐகோர்ட்டில் தாக்கல்.
* ஜெயலலிதா வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு.
* சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி நெல்லித்தோப்பு நிர்வாகிகள் ராஜினாமா.
10–ந்தேதி
* உடனடியாக சட்டசபையை கூட்ட வலியுறுத்தி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கவர்னரை சந்தித்தார்.
* முதல்–அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் தொடர வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கருத்து.
* தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி.யுடன் கவர்னர் ஆலோசனை.
* எங்களை யாரும் கடத்தவில்லை என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் பேட்டி.
* பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கி விட்டதாக ஓ.பன்னீர்செல்வத்தின் அணியில் இணைந்த மதுசூதனன் பேட்டி.
11–ந்தேதி
* ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களின் பலம் 6 ஆக உயர்ந்தது. 4 எம்.பி.க்கள் ஆதரவு.
* ஆட்சி அமைக்க தாமதம் செய்தால், எங்கள் போராட்டம் வேறு விதமாக இருக்கும் என்று சசிகலா பேட்டி.
* ஆட்சி அமைக்க உடனே வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கவர்னருக்கு சசிகலா கடிதம்.
* ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு அமைச்சர் க.பாண்டியராஜன் தாவினார். சுதந்திரமாக செயல்பட ஓ.பன்னீர்செல்வத்தின் அணிக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார்.
* நான் எந்த அணியிலும் இல்லை என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நட்ராஜ் அறிவிப்பு.
* எம்.எல்.ஏ. கடத்தல் புகாரை தொடர்ந்து சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்களிடம் தாசில்தார் 5 மணிநேரம் விசாரணை.
12–ந்தேதி
*எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேச போயஸ் கார்டனில் இருந்து கூவத்தூருக்கு சசிகலா புறப்பட்டு சென்றார். எம்.எல்.ஏ.க்களை யாரும் அடைத்து வைக்கவில்லை என்றும், அ.தி.மு.க.வுக்கு பிரச்சினை வந்தால் உயிரை கொடுத்து காப்பேன் என்றும் சசிகலா பேட்டி.
* தங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வை காணவில்லை என்று ஆங்காங்கே பொதுமக்கள் போலீசில் புகார்.
* மிஸ்டுகால் மூலம் 35 லட்சம் பேர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு.
13–ந்தேதி
* ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு.
* கூவத்தூரில் இருந்து மாறுவேடத்தில் தப்பி வந்ததாக சரவணன் எம்.எல்.ஏ. பேட்டி.
14–ந்தேதி
* சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு ஜெயில், ரூ.10 கோடி அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு.
* ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வெடிவெடித்து கொண்டாட்டம்.
* அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் சசிகலா அவசர ஆலோசனை.
* அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலாவுக்கு பதிலாக எடப்பாடி பழனிசாமி தேர்வு.
* அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருக்கு ஆதரவளித்தவர்களை நீக்கி சசிகலா உத்தரவு.
* டி.டி.வி. தினகரன், வெங்கடேஷ் அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்ப்பு. அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமனம்.
* தீர்ப்பு வந்து விட்டதால் நிலையான ஆட்சியை அமைக்க கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வற்புறுத்தல்.
* போயஸ் கார்டனில் போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.
* பன்னீர்செல்வத்துக்கு செம்மலை, சின்ராஜ் எம்.எல்.ஏ. ஆதரவு.
* கூவத்தூரில் இருந்து எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற நினைத்தால் உண்ணாவிரதம் இருப்போம் என்று நவநீத கிருஷ்ணன் எம்.பி. பேட்டி.
* கூவத்தூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
* கவர்னருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு. ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கோரிக்கை விடுத்தார்.
* ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் சந்தித்து பேசினார். அ.தி.மு.க.வின் இருகரங்களாக செயல்படுவோம் என்று பேட்டி.
* கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களுடன் தங்கி இருந்த சசிகலா பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைவதற்காக அங்கு இருந்து போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்றார்.
15–ந்தேதி
* போயஸ் கார்டனில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட சசிகலா ஜெயலலிதா நினைவிடத்தில் 3 முறை சபதம் எடுத்தார்.
* கவர்னருடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியே சந்திப்பு.
* உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே சட்டசபை தேர்தல் வரும் என்று மு.க.ஸ்டாலின் கருத்து.
16–ந்தேதி
* எடப்பாடி பழனிசாமி கவர்னருடன் மீண்டும் சந்திப்பு.
* ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிசாமிக்கு கவர்னர் அனுமதி வழங்கினார்.
* தர்மயுத்தம் தொடரும் என்று ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.
* கவர்னரின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு.
News