சபரிமலை அய்யப்பன் கோவிலில் பழைய கொடி மரம் அகற்றம்
Views - 267 Likes - 0 Liked
-
சபரிமலை அய்யப்பன் கோவிலில் இருந்த பழைய கொடி மரம் நேற்று அகற்றப்பட்டது. புதிய கொடி மரம் அமைக்கும் பணி ஏப்ரல் மாதம் தொடங்குகிறது.
மாசி மாத பூஜை
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாசி மாத பூஜைக்காக கடந்த 12-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 13-ந் தேதி முதல் நேற்று வரை மாசி மாத பூஜைகள் நடைபெற்றது. இந்த நாட்களில் தினமும் வழக்கமான பூஜைகளுடன், நெய் அபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை ஆகியவை நடைபெற்றது. நேற்று இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மாசி மாத 5 நாள் பூஜைகள் நிறைவடைந்தன.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் தற்போது உள்ள கொடி மரம் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இந்த நிலையில் பழைய கொடி மரத்தை அகற்றி விட்டு, ரூ.3½ கோடி செலவில் புதிய கொடி மரத்தை அமைக்க, திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், கடந்த ஆண்டு பத்தனம்திட்டை மாவட்டம் கோணி வனப்பகுதியில் இருந்து முதிர்ச்சியடைந்த தேக்கு மரம் வெட்டி எடுத்து பம்பை கொண்டு வரப்பட்டது. இந்த மரத்திற்கு மூலிகை தைலம் பூசப்பட்டு எண்ணெய் தொட்டியில் ஊற வைக்கப்பட்டது.
பழைய கொடிமரம் அகற்றம்
புதிய கொடி மரம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிக்காக நேற்று தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின் பழைய கொடி மரம் அகற்றப்பட்டது.
புதிய கொடி மரம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி ஏப்ரல் மாதம் 7-ந் தேதி நடைபெறும். புதிய கொடி மர பிரதிஷ்டை ஜூன் 25-ந் தேதி நடைபெறும் என்று தந்திரி தெரிவித்தார்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா, மார்ச் 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது புதிய கொடி மரம் அமைக்கும் பணி நடைபெறுவதால் கோவில் திருவிழாவை தள்ளிவைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.
ஆனால் வழக்கம் போல் மார்ச் 30-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு, சித்திரை விஷூ பண்டிகை சிறப்பு பூஜைகளுக்கு பின் கோவில் நடை ஏப்ரல் 18-ந் தேதி இரவு அடைக்கப்படும்.
புதிய கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட பின் கோவில் திருவிழா நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.News