கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்
Views - 203 Likes - 0 Liked
-
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கும் என்று தெரிகிறது.
சமரச பேச்சு தோல்வி
வாராக் கடன்களுக்கு வங்கி உயர் அதிகாரிகள் பொறுப்பு ஏற்கவேண்டும், வங்கித்துறையில் மத்திய அரசு சீர்திருத்தங்களை கைவிடவேண்டும், நிரந்தர வேலைவாய்ப்புகளை அயலக சேவைக்கு விடுவதை(அவுட்சோர்சிங்) அனுமதிக்க கூடாது, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணமதிப்பு நீக்க நடவடிக்கை காலத்தில் கூடுதல் நேரம் பணியாற்றிய ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், வங்கி ஊழியர்களுக்கான அடுத்த கட்ட சம்பள விகிதத்தை புதுப்பிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் வற்புறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பான சமரச பேச்சுவார்த்தை தலைமை தொழிலாளர் நல ஆணையர் ஏ.கே.நாயக் தலைமையில் கடந்த 21–ந் தேதி டெல்லியில் நடந்தது. அப்போது வங்கி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை வங்கிகளின் நிர்வாக அமைப்பான இந்திய வங்கிகள் சங்கம் ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
ஒரு நாள் வேலை நிறுத்தம்
இதுபற்றி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘28–ந்தேதி வேலை நிறுத்த அறிவிப்பை வாபஸ் பெற்றால் மட்டுமே பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும் என்று இந்திய வங்கிகள் சங்கம் நிபந்தனை விதித்தது. இது ஏற்புடையது அல்ல. சமரச பேச்சுவார்த்தையில் எங்களது தரப்பில் வைத்த கோரிக்கைகளுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனால், நாளை(செவ்வாய்க்கிழமை) வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது’’ என்றார்.
ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பில் மொத்தம் 9 சங்கங்கள் உள்ளன. இவற்றில் பாரதீய ஜனதாவின் பாரதீய மஸ்தூர் சங்கத்தின் தேசிய வங்கி ஊழியர்கள் அமைப்பு, தேசிய வங்கி அதிகாரிகள் அமைப்பு ஆகிய இரண்டும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாது என்று தெரிகிறது. மற்ற 7 சங்கங்களும் வேலை நிறுத்ததில் பங்கேற்கின்றன.
வங்கி சேவை பாதிப்பு
பொதுத்துறை வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தையொட்டி, பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகியவை பிப்ரவரி 28–ந்தேதி வங்கி கிளைகளின் பணிகள் பெரிதும் பாதிக்கப்படலாம் என்று ஏற்கனவே தங்களது வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டன.
அதேநேரம் இந்த வேலை நிறுத்தத்தால், ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எப்.சி., ஆக்சிஸ், கோடக் மகிந்திரா ஆகிய தனியார் வங்கிகளில் காசோலைகளை மாற்றும் சேவை கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News