குமரி மாவட்டத்துக்கு 322 பசுமை வீடுகள் ஒதுக்கீடு: சிறப்பு கிராமசபை கூட்டம் நாளை நடக்கிறது
Views - 415 Likes - 0 Liked
-
சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்திற்கு 2016–2017–ம் ஆண்டிற்கு 322 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டின் மதிப்பீடு ரூ.2.10 லட்சம் ஆகும். இதில் கட்டுமான பணிக்கு ரூ.1.80 லட்சமும், சூரிய மின் சக்தியுடன் கூடிய மின்விளக்கு பொருத்திட ரூ.30 ஆயிரமும் ஆகும்.
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வீடுகளுக்கு தேர்வு செய்யப்படும் பயனாளிகள் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிக்குட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும், 300 சதுர அடிக்கு குறையாத சொந்த நிலத்துக்கான பட்டா வைத்திருப்பவராகவும், நிலையான காங்கிரீட் வீடு இல்லாதவராகவும் இருத்தல் அவசியம்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககம் மூலம் தயாரிக்கப்பட்ட மக்கள் பங்கேற்புடன் கூடிய மக்கள் நிலை ஆய்வு பட்டியலில், மிகவும் ஏழ்மை பட்டியலில் பெயர் உள்ளவர்கள், மாற்றுதிறனாளிகள், விதவைகள், ஆதரவற்ற மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பெண்கள் தலைமையிலான குடும்பம, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை உறுப்பினர்கள், எச்.ஐ.வி., ஏ.ஐ.டி.எஸ்., டி.பி., ஆகிய நோய்களால் பாதிக்கப்படவர்கள், திருநங்கைகள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களை கொண்ட குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
எனவே, இத்திட்டத்தில் பயனடையும் பயனாளிகள் பட்டியலை ஒப்புதல் பெற குமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளிலும் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு அந்தந்த ஊராட்சி பகுதிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.News