விவசாய கடன் தள்ளுபடி இல்லை பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்
Views - 109 Likes - 0 Liked
-
தமிழகத்தில் பருவமழை பொய்த்துப் போனதால் விவசாயிகள் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர். அவர்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது.
விவசாயிகள் தற்கொலை
இதன் காரணமாக கூட்டுறவு வங்கிகள், நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத இக்கட்டான நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் பெற்ற கடன்களை திருப்பி வசூலிப்பதற்கு பல்வேறு வங்கிகளும் கெடுபிடி செய்து வருகின்றன. பல்வேறு இடங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
குறைந்தபட்சம் விவசாய கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தால், கொஞ்சம்
நிம்மதிப்பெருமூச்சு விடலாம் என்ற நிலையில் விவசாயிகள் உள்ளனர். எனவே இதற்காக தொடர்ந்து விவசாயிகள் குரல் கொடுத்து வருகின்றனர். அரசியல் கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன.
உ.பி.யில் தள்ளுபடி
கூட்டுறவு வங்கிகளில் அனைத்து விவசாயிகளும் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது. இதனால் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.
மேலும், உத்தரபிரதேச மாநிலத்தில் ரூ.36 ஆயிரத்து 359 கோடி விவசாயக்கடன்கள் அம்மாநில அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்ற விவசாயிகளின் எதிர்பார்ப்பில் ஒரு நியாயம் இருப்பதாக நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.
டெல்லியில் போராட்டம்
இதற்கிடையே தலைநகர் டெல்லியில் ஜந்தர்மந்தர் பகுதியில், வறுத்தெடுக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் அதன் தலைவர் அய்யாக் கண்ணு தலைமையில் விவசாயிகள் கடந்த மார்ச் மாதம் 14–ந் தேதி முதல் பல்வேறு வகையிலான அறப்போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் விவசாய கடன் களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். அவர்களை தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்துக் கட்சி தலைவர்களும் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். டெல்லி முதல்– மந்திரி கெஜ்ரிவாலும் அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவர்களது போராட்டம் நேற்று 29–வது நாளை எட்டியது.
பாராளுமன்றத்தில் எதிரொலிப்பு
விவசாயிகள் பிரச்சினை பாராளுமன்றத்திலும் நேற்று எதிரொலித்தது.
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவது பற்றி பாராளுமன்ற மேல்–சபையில் கேள்வி எழுப்பப்பட்டது.
அந்த கேள்விக்கு மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி சந்தோஷ் குமார் கங்குவார் எழுத்து மூலம் பதில் அளித்தார். அந்தப் பதிலில் அவர் கூறி இருப்பதாவது:–
விவசாயிகளின் பயிர்க்கடன் களை தள்ளுபடி செய்யும் எந்த திட்டமும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை. இருந்தாலும், விவசாயிகளின் கடன் சுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் பெரிய அளவில் எடுக்கப்பட்டுள்ளன.
குறைந்த வட்டி விகிதம்
விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரையிலான பயிர்க்கடன் கள் 7 சதவீதம் என்ற குறைந்த அளவிலான வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது. இந்தக் கடன்கள் விவசாயம், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் வட்டி மானிய திட்டத்தின்கீழ் வழங்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் தங்களுடைய குறுகிய கால பயிர்க்கடன்களை உரிய காலகட்டத்தில் திருப்பி செலுத்துகிற விவசாயிகளுக்கு, கூடுதலாக 3 சதவீதம் வட்டி மானியம் தரப்படுகிறது. இதனால் அவர்களுக்கு ஆண்டுக்கு 4 சதவீதம் என்ற குறைந்த வட்டி விகிதம்தான் வசூலிக்கப்படுகிறது.
வங்கிகளுக்கு அறிவுறுத்தல்
இவை தவிர்த்து, இயற்கை பேரிடர்களால் விவசாயிகள் இன்னல் அடைகிறபோது, அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். குறிப்பாக, தற்போதைய பயிர்க்கடன் களை மாற்றி அமைப்பதுடன், புதிய கடன்களையும் வழங்க வேண்டும் என்று வங்கிகள் அறிவுறுத்தப்படுகின்றன.
தேசிய பேரழிவு மேலாண்மை கட்டமைப்பின் விதிமுறைக்கு ஏற்ப வங்கிகள் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான குறைந்தபட்ச பயிர் இழப்பு அளவும் 33 சதவீதம் என்ற அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மந்திரி சந்தோஷ்குமார் கங்குவார் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகள் வேதனை
விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பு, விவசாயிகள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.News